வாழ்வா சாவா கட்டத்தில் இந்தியா: தெ.ஆ அணிக்கு 241 ரன்கள் இலக்கு!

வெள்ளி, 26 ஜனவரி 2018 (20:20 IST)
இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 241 ரன்கள் அந்த அணிக்கு வெற்றிபெற இலக்காக நிர்ணயித்துள்ளது. இதனால் இந்திய அணி வாழ்வா சாவா கட்டத்தில் உள்ளது.
 
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதல் இரண்டு போட்டிகளிலும் மோசமாக விளையாடி தோல்வியை தழுவி தொடரை இழந்துள்ள நிலையில், வாஷ் அவுட்டை தவிற்க, ஆறுதல் வெற்றி பெற மூன்றாவது போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது.
 
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் வழக்கம் போல இந்திய அணி வீரர்கள் சொதப்பி முதல் இன்னிங்சில் 187 ரன்னுக்கு அனைத்து விக்கட்டையும் இழந்தது. இதனையடுது களமிறங்கிய தென்னாப்பிரக்கா அணியும் இந்திய அணியின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 194 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
 
இதனையடுத்து இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை 7 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆரம்பித்தது. முரளி விஜய்(25), கோலி(41), ரஹானே(48), புவனேஸ்வர் குமர்(33), முகமது ஷமி(27) ஆகியோரின் கூட்டு முயற்சியால் இந்திய அணி 247 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
 
ஏற்கனவே 7 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியதால் தென்னாப்பிரிக்கா அணிக்கு 241 ரன்கள் அடித்தால் வெற்றி என இலக்கு நிர்ணயித்தது இந்திய அணி.
 
இந்த ஆடுகளத்தில் இந்த இலக்கு என்பது சற்று கடினமானதுதான். ஆனாலும் தென்னாப்பிரிக்கா அணிக்கு இது சொந்த மண் என்பதாலும், அவர்கள் நல்ல ஃபார்மில் இருப்பதாலும் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு என்பது வாழ்வா சாவா என்பது தான். இரண்டாவது இன்னிங்சை ஆடி வரும் தென்னாப்பிரிக்கா அணி 9 ரன்னுக்கு ஒரு விக்கெட்டை இழந்து தற்போது ஆடி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்