கோலி சதமடிச்சா மட்டும் குறை சொல்றாங்க… ஆதரவாக பேசிய பாகிஸ்தான் வீரர்!

வெள்ளி, 13 ஜனவரி 2023 (16:07 IST)
சமீபத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடந்த ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதமடித்தார். இது ஒரு நாள் போட்டிகளில் அவரின் 45 ஆவது சதமாகும். இந்தியாவில் அவர் அடித்த 20 ஆவது சதமாகும். இதன் மூலம் இந்தியாவில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சச்சினின் சாதனையை சமன் செய்துள்ளார். சச்சினை விட குறைவான இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் கம்பீர் “கோலி இன்னும் கூட நிறைய சதங்கள் அடித்து சாதனை படைக்கலாம். ஆனால் சச்சினோடு அவரை ஒப்பிட முடியாது. ஏனென்றால் சச்சின் விளையாடிய போது இன்னிங்ஸ் முழுவதும் ஒருபந்துதான் வீசப்படும். இப்போது இரண்டு பந்துகள் மாற்றப்படுகின்றன. அதுபோல சச்சின் விளையாடும் போது உள்வட்டத்துக்குள் 5 வீரர்கள் நிற்கும் விதிகள் எல்லாம் இல்லை” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் “கோலி சதமடித்தால் மட்டும் அதை ப்ளாட் பிட்ச் என்றும் எதிரணியின் பந்துவீச்சு சரியில்லை என்றும் குறை சொல்கிறார்கள். அப்படி ப்ளாட் பிட்ச்சாக இருந்தால் ஒருமுறைதான் சதம் அடிக்க முடியும். 73 சதங்களை அவர் அடித்துள்ளார். விராட் கோலியை ஒரு கிரிக்கெட் மேதை என்றே நான் நினைக்கிறேன்.” என தனது யுட்யூப் சேனலில் பேசியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்