PPL 2! வேதாந்த் பரத்வாஜ் அபார ஆட்டம்! ஜெனித் யானம் ராயல்ஸ் த்ரில் வெற்றி

Prasanth K

புதன், 9 ஜூலை 2025 (08:28 IST)

மாஹே மெகலோ ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஜெனித் யானம் ராயல்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

பாண்டிச்சேரி பிரிமியர் லீக்கின் 2ஆவது சீசன், சீகெம் மைதானத்தில் கோலாகலமாகத் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை 06.00 மணிக்கு நடைபெற்ற 5ஆவது லீக் போட்டியில் ஜெனித் யானம் ராயல்ஸ் அணியும், மாஹே மெகலோ ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற மாஹே மெகலோ ஸ்ட்ரைக்கர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

 

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜெனித் யானம் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் பிரவின் (6), பரமேஷ்வரன் (5) அடுத்தடுத்து வெளியேறினர். பின்னர் வந்த வீரர்களில் அணியின் கேப்டன் தருண் 19 ரன்களும், அதித்யா 11 ரன்கள் எடுத்தனர்.

 

ஆனாலும், அட்டகாசமாக ஆடிய வேதாந்த் பரத்வாஜ் 62 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவரது கணக்கில், 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடக்கம். மாஹே மெகலோ தரப்பில் திவாகர் கோபால் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

இதனையடுத்து 165 ரன்கள் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய மாஹே மெகலோ ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களின் மோசமான ஆட்டத்தால் முதல் 6 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 37 ரன்கள் மட்டுமே எடுத்தது.

 

ஒரு பக்கம் அக்‌ஷந்த் அணியின் வெற்றிக்காக கடுமையாக போராடினார். மாஹே மெகலோ ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கு கடைசி 2 ஓவர்களில் 31 ரன்கள் தேவைப்பட்டது. இந்நிலையில், சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த அக்‌ஷந்த் 35 பந்துகளில் (4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) 46 ரன்கள் எடுத்து ரன் அவுட் முறையில் வெளியேறினார்.

 

இறுதியில், மாஹே மெகலோ ஸ்ட்ரைக்கர்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. இதனால் ஜெனித் யானம் ராயல்ஸ் அணி 9 வித்தியாசத்தில் மாஹே மெகலோ ஸ்ட்ரைக்கர்ஸ் அணியை வீழ்த்தியது. ஜெனித் யானம் ராயல்ஸ் தரப்பில் பரத் வாகணி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜெனித் யானம் ராயல்ஸ் தனது முதல் வெற்றியை பதிவு செய்ததும் குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்