இந்திய கிரிக்கெட்டின் முடிசூடா மன்னன் யார்?… கவுதம் கம்பீர் சொன்ன வீரர்!

வியாழன், 12 செப்டம்பர் 2024 (09:15 IST)
இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான கம்பீர், தற்போது இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார். அதற்கு முன்பு வரை அவர் இந்திய கிரிக்கெட்டின் வீரர்களான தோனி மற்றும் கோலி ஆகியோரைக் கடுமையாக விமர்சித்து வந்தார். அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் கிரிக்கெட் ஒரு குழு விளையாட்டாக பார்க்க்ப்படாமல், தனிநபர் சாகசங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும் பேசிவந்தார்.

இந்திய அணிக்கு பயிற்சியாளராக பொறுப்பேற்ற முதல் தொடரிலேயே இந்திய அணி, இலங்கையிடம் ஒருநாள் தொடரை தோற்றது. இதையடுத்து 40 நாட்கள் இடைவேளையில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இம்மாதத்தில் விளையாட உள்ளது. அதன்பின்னர் ஆஸ்திரேலியா சென்று பார்டர் கவாஸ்கர் கோப்பையில் விளையாட உள்ளது.

இந்நிலையில் அவர் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் அவரிடம் “கவாஸ்கர், சச்சின், தோனி மற்றும் கபில்தேவ்” ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு இதில் இந்திய கிரிக்கெட்டின் ஷாகின்ஷா யார் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், இவர்கள் யாரையும் தேர்வு செய்யாமல் விராட் கோலியின் பெயரை தேர்வுசெய்துள்ளார். விராட் கோலிக்கும் கம்பீருக்கும் இடையே கடந்த காலத்தில் கடுமையான சச்சரவுகள் நடந்திருந்தபோதும் அவரது பெயரை கம்பீர் தேர்வு செய்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்