ஹெட்போன்ல பாட்டுக் கேக்காதீங்க.. கேட்கும் திறனை இழந்த பாடகி! – ரசிகர்களுக்கு அறிவுரை!

Prasanth Karthick

புதன், 19 ஜூன் 2024 (10:30 IST)
இந்தி, தமிழ் என பல இந்திய மொழிகளில் பல பாடல்களை பாடிய பாடகிக்கு திடீரென கேட்கும் திறன் குறைபாடு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



தற்போது இளைஞர்களிடையே பாடல் கேட்கும் மோகம் அதிகமாக உள்ளது. முந்தைய காலங்களில் பலரும் ஸ்பீக்கர்களில் பாட்டு வைத்து கேட்டு வந்த நிலையில் தற்போதைய காலத்தில் பலரும் ஹெட்போன்கள் மூலமாக பாட்டுக் கேட்கவே விரும்புகின்றனர். இளைஞர்கள் பலரும் ஹெட்போனில் முழு சத்தத்தில் பாடல்களை வைத்து கேட்கின்றனர். இதனால் காது சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கும் அதேசமயம், முழு சத்தத்தில் பாடல்கள் கேட்டுக் கொண்டு சாலையில் செல்வது ஆபத்தையும் விளைவிப்பதாக உள்ளது.

இந்நிலையில்தான் ஹெட்போன்கள் அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்து குறித்து பேசியுள்ளார் பிரபல பின்னணி பாடகி அல்கா யாக்னிக். அல்கா தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களை பாடி, இதுவரை 2 தேசிய விருதுகளையும் வென்றுள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பல பாடல்களை இவர் பாடியுள்ளார்.

சமீபத்தில் அல்கா யாக்னிக் காது கேட்கும் திறன் குறைபாடு பிரச்சினையில் சிக்கியுள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் “நான் சில வாரங்களுக்கு முன்னர் விமானத்தில் இருந்து வெளியே வந்தபோது என்னால் எதையும் கேட்க முடியவில்லை. எனக்கு வைரஸ் தாக்குதலால் காதுகளில் கேட்கும் நரம்பு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் கேட்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதற்காக நான் சிகிச்சை பெற்று வருகிறேன். உங்களுடைய ஹெட்போன்களில் அதிக சத்தத்தில் பாடல் கேட்பதை தவிர்த்து மிகுந்த எச்சரிக்கையோடு இருங்கள்” என்று கூறியுள்ளார்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்