கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து இந்தியாவில் எப்போது கிடைக்கும்?

சனி, 11 ஜூலை 2020 (08:29 IST)
இந்தியாவின் முக்கிய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தி இந்து - கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து இந்திய சந்தைகளுக்கு வர இன்னும் குறைந்தது 12 மாத காலம் ஆகும் என்று இந்திய அரசு அதிகாரிகள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்றக் குழுவிடம் வெள்ளியன்று தெரிவித்துள்ளனர் என்று தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை கண்டறிவதற்கான சாத்தியம் நிறைந்த காலவரையறை அடுத்த ஆண்டின் சில காலத்திலேயே இருக்க முடியும் என்றும் அவர்கள் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தலைமையிலான இந்த நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்துள்ளனர் என்கிறது அந்த செய்தி.

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் பரிசோதனைகள் வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் முடிக்கப்பட்டு அப்போது முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் சமீபத்தில் ஆய்வு நிறுவனங்களுக்கு கடிதமொன்றை எழுதி இருந்தது. ஆனால் அடுத்தநாளே அதில் இருந்து பின் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

"எல்லாம் சரியாக நடந்தால் தடுப்புமருந்து கிடைக்க இன்னும் 12 மாத காலம் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்," என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார் என்கிறது அந்த செய்தி.

மனிதர்களின் உடலில் செலுத்தி பரிசோதனை செய்வதற்காக, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் (Covaxin), சைடஸ் கேடில்லா நிறுவனத்தின் சைக்கோவ்-டி (ZyCov - D) உள்ளிட்ட ஐந்து நிறுவனங்களின் தடுப்பு மருந்துகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் அலுவலகம் அனுமதி அளித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்