கர்நாடக அரசு, ஐடி ஊழியர்களின் தினசரி வேலை நேரத்தை 9 மணியிலிருந்து 12 மணிநேரமாக உயர்த்த திட்டமிட்டிருப்பது, நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்ப துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இன்போசிஸ் இணை நிறுவனர் என்.ஆர். நாராயண மூர்த்தி, "இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணிநேரம் வேலை செய்ய வேண்டும்" என்று சொன்னதை தான் கர்நாடக அரசு நிறைவேற்றுவதாக நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்தத் திட்டம் அமலுக்கு வந்தால், தற்போதைய மூன்று ஷிஃப்ட் முறை இரண்டு ஷிஃப்ட்டுகளாக மாறி, மூன்றில் ஒரு பங்கு ஐடி ஊழியர்கள் வேலையை இழப்பார்கள் என கர்நாடக மாநில ஐடி/ஐடிஇஎஸ் ஊழியர் சங்கம் கடுமையாக எச்சரித்துள்ளது. "இது வெறும் வேலை இழப்பு மட்டுமல்ல, நீண்ட வேலை நேரத்தால் ஊழியர்களின் ஆரோக்கியமும் பாதிக்கப்படும்" என்றும் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
"வாரத்திற்கு 70 மணிநேரம் வேலை செய்ய வேண்டும்" என்ற நாராயண மூர்த்தியின் கருத்துடன் இந்த திட்டத்தை இணைத்து பலரும் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். "பெங்களூரு டிராஃபிக்கில் 4 மணிநேரம், 12 மணிநேர வேலை என்றால், மீதமுள்ள நேரத்தில் ஓய்வுக்கும், குடும்பத்திற்கும் என்ன இருக்கிறது?" என்று ஒரு பயனர் கேள்வி எழுப்ப, "ஊழியர்களை அலுவலகத்திலேயே தூங்கச் சொல்லலாமே!" என்று மற்றொருவர் கிண்டலாக கருத்து தெரிவித்துள்ளார்.