இரான் பாதுகாப்புப் படையை பயங்கரவாத அமைப்பு என அறிவித்த அமெரிக்கா

செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (10:23 IST)
இரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
 
மற்றொரு நாட்டின் ராணுவத்தை அமெரிக்கா பயங்கரவாத இயக்கமாக அறிவிப்பது இதுவே முதல் முறை.
 
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மத்திய கிழக்கு பகுதியில் செயல்படும் அமெரிக்க ராணுவத்தை இரான் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளதாக அந்நாட்டின் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
 
இரானின் சர்வதேச அணு ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக டிரம்ப் அறிவித்தது முதல் இவ்விருநாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
 
இரானின் பாதுகாப்புப் படையையே பயங்கரவாத இயக்கமாக அறிவித்ததன் மூலம், அந்நாட்டின் மீது அமெரிக்காவால் மேலதிக தடைகளை விதிக்க முடியும். இதன் காரணமாக இரானின் தொழில்துறை பாதிப்புக்குள்ளாகும் சூழல் உருவாகியுள்ளது.
 
ஏற்கனவே, இரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையும் அதோடு தொடர்புடைய மற்ற சில அமைப்புகளும் அணுஆயுத பரவல், பயங்கரவாத ஆதரவு மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக எழுந்த குற்றச்சாட்டின் காரணமாக அவற்றின் மீது அமெரிக்கா பல்வேறு தடைகளையும் விதித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்