சூடானிலிருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தப்பிச்செல்ல முயற்சிப்பதால் தத்தளிக்கும் துறைமுக நகரம்

திங்கள், 1 மே 2023 (23:55 IST)
சூடான் தாக்குதல் காரணமாக தப்பி வந்த பொதுமக்கள் அப்போது மோசமான தெருக்களில் தூங்கிக்கொண்டிருந்தனர். உள்ளூரில் இருக்கும் விடுதிகள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களால் நிரம்பி வழிந்தன. தாக்குதல் ஆபத்திலிருந்து ஒவ்வொரு நாடும் தங்களது குடிமக்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை அவசர அலுவலகங்களைத் திறந்து அதிவிரைவாக மேற்கொண்டு வந்தன.
 
சூடானிலிருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தப்பிச்செல்ல  முயற்சிப்பதால் தத்தளிக்கும் துறைமுக நகரம்
 
போர்ட் சூடான் நகரில் யேமன், சிரியா மற்றும் அங்கிருந்து தப்பிச் செல்ல விரும்பிய சூடான் நாட்டு மக்கள் அதிக எண்ணிக்கையில் பதற்றத்துடன் குழுமியிருந்தனர்.
 
மேலும், இந்நகரில் யேமன் நாட்டைச் சேர்ந்த சுமார் 3,000 மாணவர்கள் வாரக்கணக்கில் சிக்கித் தவித்துவந்தனர். சவுதி அரேபிய அரசு யேமன் நாட்டவர்களை மீட்பதில் அக்கறை காட்டினாலும், பெரும் எண்ணிக்கையிலான மக்களை மீட்க அந்நாட்டு அரசு தயக்கம் காட்டுகிறது என அவர்களுக்கு உதவும் பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 
சவுதி அரேபியாவுக்கு வரும் பெரும்பாலான மக்கள் அங்கே சிறிது நாட்கள் விடுதிகளில் தங்கியிருக்க அந்நாட்டு அதிகாரிகள் உதவுகின்றனர். ஆனால், அந்த மக்களின் சொந்த நாட்டு அரசுகள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக அவர்களுக்கான விடுதிக் கட்டணங்களை செலுத்திவிட்டு, அவர்களை அந்தந்த நாடுகளுக்கு அழைத்துச் செல்லும் ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
 
ஜெட்டாவிலிருந்து கிளம்பிய போது, என்னுடன் பணியாற்றிய முகமது ஹஷீமின் நெருங்கிய உறவினர் ஒருவர் அவரது இரண்டு குழந்தைகளுடன் செங்கடலில் 18 மணிநேரப் பயணத்தில் சவுதி அரேபியாவுக்கு தப்பிச் சென்றதைப் பார்த்தபின், போர்ட் சூடானில் தமது உறவினர்கள் யாராவது இருக்கின்றனரா என சல்லடை போட்டு அவர் தேடிவிட்டார்.
 
வெளிநாட்டு பாஸ்போர்ட்டுகளை வைத்திருக்கும் சூடான் நாட்டு மக்கள் அங்கிருந்து தப்பிச் செல்வது சோகத்திலும் ஒரு நிம்மதியான அனுபவமாகவே இருந்தது.
 
சூடானிலிருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தப்பிச்செல்ல  முயற்சிப்பதால் தத்தளிக்கும் துறைமுக நகரம்
 
கார்ட்டூமில் உள்ள ஸ்போர்ட் சிட்டியில் ஏப்ரல் 15-ம் தேதி தாக்குதல் தொடங்கிய நிலையில், அங்கே வசித்து வந்த ரஷா என்ற பெண், தூங்கும் குழந்தையை தோளில் சுமந்தபடியே எங்கள் குடும்பம் சூடானில் இருந்து வெளியேற உதவுங்கள் எனக் கதறினார். சூடானைக் காப்பற்ற உலக நாடுகளிடம் பேசும்படியும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
 
அழகாக அமெரிக்க ஆங்கிலம் பேசும் அவரது எட்டு வயது மகள் லீன், அவர்களது வீட்டிற்குள் ஆயுதமேந்திய தாக்குதல்தாரிகள் புகுந்த போது ஏற்பட்ட அனுபவத்தை அச்சத்துடன் விவரித்தார். தாக்குதல்தாரிகள் உட்புகுந்த போது, அந்த வீட்டில் இருந்த பத்து பேரும் மறைவான இடங்களில் பதுங்கிக் கொண்டதாகவும், அழுதால் சத்தம் கேட்டு விடும் என்பதற்காக அழுகையை அடக்கிக்கொண்டு ஒளிந்திருந்ததாகவும் அந்தக் குழந்தை தெரிவித்தது.
 
அவர்கள் மிகவும் மோசமானவர்கள் என லீனின் இளைய சகோதரன் சொன்னதைக் கேட்டபோது என்ன சொல்வது என்றே தெரியவில்லை. வீட்டிற்குள் புகுந்த தாக்குதல்தாரிகள் அனைவரும் ஆர்.எஸ்.எஃப். படையைச் சேர்ந்தவர்கள் என லீனின் தந்தை விளக்கினார். அவர்கள் அனைவரும் வன்முறை மற்றும் கொள்ளையில் ஈடுபட்டதாக பெரும்பாலானோர் புகார் தெரிவித்தனர்.
 
சூடான் நாட்டில் சக்தி வாய்ந்த இருநபர்களுக்கு இடையே நடக்கும் இப்போர் மிகவும் மோசமடைந்து வரும் நிலையில், அவர்களுக்குள் நிலவிய தனிப்பட்ட மற்றும் அரசியல் விரோதம் தான் காரணம் என்பதை விட அவர்களது ஆதிக்க அதிகாரங்களுக்கு இடையே நிலவும் போட்டிதான் காரணம் என்பதே சரியாக இருக்கும்.
 
யேமன் ஹௌதிகளுடன் போரிட, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு ஆதரவாக தமது படைகளை அனுப்பிய துணை ராணுவப் படையின் ஜெனரல் ஹெமெத்திக்கு இந்நாடுகள் தாராளமாக நிதி அளித்ததால் அவர் பொருளாதார வளம் மிக்க ஜெனரலாக இருக்கிறார்.
 
ஆனால், அண்மைக்காலமாக சூடான் ராணுவ ஜெனரல் புர்ஹானுக்கும் நெருக்கம் மிகுந்த நாடாக சவுதி அரேபியா விளங்கி வருகிறது. கனிம வளம் மற்றும் விவசாய வளங்களை அதிகமாகக் கொண்ட சூடான் நாட்டின் மீது எகிப்து, இஸ்ரேல், ரஷ்யா மட்டுமல்லாமல், ரஷ்யாவின் ஆதரவு பெற்ற தனியார் ராணுவமும் ஒரு கண் வைத்துள்ளது என்றே சொல்லலாம்.
 
சூடானிலிருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தப்பிச்செல்ல  முயற்சிப்பதால் தத்தளிக்கும் துறைமுக நகரம்
 
ஆனால் தற்போதைய ஒரு மோசமான சூழலில், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தான் இந்த கொடூரமான தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்துடன் பேச்சு நடத்திக் கொண்டிருக்கின்றன.
 
மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள சவுதி அரேபியாவுக்கு பல நாட்டு தூதர்கள் மனமாற நன்றி தெரிவித்துவருகின்றனர். இதுவரை 100 நாடுகளைச் சேர்ந்த 5,000 பேர் செங்கடல் வழியாக சவுதி அரேபிய போர்க்கப்பல்கள் மற்றும் அல்லது அந்நாட்டு ராணுவம் அனுப்பிய தனியார் கப்பல்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதில் சனிக்கிழமையன்று மிக அதிகமாக ஒரே நாளில் ஈரானியர்கள் உள்பட 2,000 பேர் சவுதி அரேபியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பரம்பரை விரோதிகளாக விளங்கிய சவுதி அரேபியாவும், ஈரானும் அண்மையில் தங்கள் பகையை மறந்து, தூதரக உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளும் முயற்சியைத் தொடங்கியுள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.
 
சூடானில் பல ஆண்டுகள் பொறியாளராகப் பணியாற்றிய கணவருடன் ஜெட்டா வந்த நஸ்லி என்ற ஈரானிய சிவில் எஞ்சினியர், சவுதி அரேபியாவும், ஈரானும் உறவுகளைப் பலப்படுத்தினால் அது தங்களுக்கு ஒரு வரமாகவே அமையும் என்றார்.
 
இந்நிலையில், தாக்குதலில் இருந்து தப்பி வந்த மேலும் பலர், ஞாயிறன்று சவுதி போர்க்கப்பலை எதிர்பார்த்து இழுவைப் படகு மூலம் பயணத்தைத் தொடங்கினர். அவர்கள், சூடான் நாட்டை நினைத்து வருந்தியதுடன், வாழ்க்கையில் மீண்டும் ஒரு முறை அந்த நாட்டின் பக்கமே தலைவைத்தும் படுக்கக்கூடாது என்ற தீர்க்கமான எண்ணத்தில் அங்கிருந்து வெளியேறும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்