கொரோனா வைரஸால் இறந்த முஸ்லிம்கள்: அடக்கம் செய்ய மாலத்தீவிடம் உதவி கோரும் இலங்கை

செவ்வாய், 15 டிசம்பர் 2020 (15:03 IST)
இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் பூதவுடல்களை தகனம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், முஸ்லிம்களின் உடல்களும் தகனம் செய்யப்பட்டு வருகின்றன.
 
இறந்த முஸ்லிம்களின் உடல்கள், இஸ்லாமிய மத வழக்கப்படி அடக்கம் செய்யப்படாமல், தகனம் செய்யப்படுவதற்கு தொடர்ச்சியாக எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இவ்வாறான நிலையில், இலங்கையில் கோவிட்-19 தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு மாலத்தீவிடம் (மாலைத்தீவு) இலங்கை உதவியை கோரியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
 
மாலத்தீவில் வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷாஹிட் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார். இஸ்லாமியர்கள் மாத்திரமன்றி, வேறு மதத்தவர்களைச் சேர்ந்தவர்கள், சர்வதேச நாடுகள், ஐக்கிய நாடுகள் மன்றம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்கள் என பலரும் உடல்களை அடக்கம் செய்த அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
 
எனினும், கோவிட்-19 தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வதன் ஊடாக, கொரோனா வைரஸ் நிலத்தடி நீருடன் கலப்பதற்கான அபாயம் காணப்படுவதாக சுகாதார பிரிவினர் தொடர்ச்சியாக தெரிவித்து வந்தனர். கோவிட்-19 தொற்றில் உயிரிழக்கும் ஒருவரின் உடலில், குறித்த வைரஸ் 36 நாட்கள் வாழும் என சுகாதார பிரிவினர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் அண்மையில் தெரிவித்திருந்தனர்.
 
கோவிட்-19 தொற்றில் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு சுகாதார நிபுணர்களின் பரிந்துரைகளுக்கு அமைய, நிலத்தடி நீர் மட்டம் மிகவும் ஆழமாகக் காணப்படும் வறட்சியான நிலப்பரப்பை கொண்ட பகுதிகளை தெரிவு செய்வது குறித்து ஆராயுமாறு பிரதமர், அதிகாரிகளுக்கு அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
 
இலங்கையில் கோவிட் தொற்று தாக்கத்தினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை தமது நாட்டில் அடக்கம் செய்வது தொடர்பில் மாலத்தீவு கவனம் செலுத்தியுள்ளது. இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இந்த விடயம் தொடர்பில் ஆராயுமாறு அந்த நாட்டு ஜனாதிபதி இப்ரைஹிம் சோலி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
 
மாலத்தீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷாஹிட் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார். மாலத்தீவில் இஸ்லாமியர்களின் முறைப்படி உடல்களை அடக்கம் செய்ய முடியுமா என இலங்கை ஜனாதிபதி கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
மாலத்தீவு மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் காணப்படும் இருதரப்பு தொடர்புகளை உறுதிப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கையை முன்னெடுக்க அந்த நாட்டு ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக மாலத்தீவு வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
 
கோவிட்-19 வைரஸ் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில், அதற்கு உதவிகளை வழங்குவதை உறுதிப்படுத்துவதே இதன் நோக்கம் என மாலத்தீவு வெளிவிவகார அமைச்சர் தெரிவிக்கின்றார்.
 
இலங்கையில் கோவிட்-19 தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் உடல்களை அடக்கம் செய்து தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு, தொடர்ந்தும் அந்த விடயம் குறித்து ஆய்வுகளை நடத்தி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்