அதிமுகவில் பல வருடங்கள் பயணித்தவர் செங்கோட்டையன். கோபிசெட்டிபாளையம் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு பலமுறை வெற்றி பெற்றவர். பலமுறை எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும் இருந்தவர். எம்ஜிஆர் அதிமுக துவங்கிய போதிலிருந்தே அதிமுகவில் தன்னை இணைத்துகொண்டவர் செங்கோட்டையன். ஜெயலலிதா காலத்திலும் முக்கிய அமைச்சராக செங்கோட்டையன் இருந்தார்.. ஜெயலலிதா மறைந்த போது அடுத்த முதலமைச்சர் யார் என்கிற பட்டியலில் செங்கோட்டையனின் பெயரும் இடம் பெற்றிருந்தது..
ஆனால் சசிகலாவின் உதவியால் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகி விட அந்த வாய்ப்பு செங்கோட்டையனுக்கு கிடைக்கவில்லை. ஒருபக்கம் எடப்பாடி பழனிச்சாமியால் விலக்கி வைக்கப்பட்ட சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என செங்கோட்டை பேசத் தொடங்கியதால் அவரை கட்சியிலிருந்து தூக்கினார் பழனிச்சாமி. இதையடுத்து செங்கோட்டையன் தன்னை தவெகவில் இணைத்துக்கொண்டார்.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஈரோட்டில் தவெகவுக்கு ஆதரவாக அவர் பிரச்சாரம் செய்த போது விசில் சின்னத்தில் வாக்களியுங்கள் என்று சொல்வதற்கு பதிலாக இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார்.. உடனே சுதாரித்த செங்கோட்டையன் இரட்டை இலை என்று சொல்லி பழகிவிட்டேன் என சமாளித்தார்..