மாணவர்கள் பள்ளி செல்வதற்கான வழிமுறைகள் வெளியீடு

புதன், 9 செப்டம்பர் 2020 (14:28 IST)
விருப்பத்தின்பேரில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதியளிக்கப்பட்டதையடுத்து, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 
 
இதுபற்றி மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: "மத்திய அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் ஆசிரியர்களின் ஆலோசனைகளைப் பெற சுய விருப்பத்தின்பேரில் பள்ளிகளுக்கு வர 21-ம் தேதி முதல் அனுமதியளிக்கப்படுகிறது. இதற்குப் பெற்றோர்களின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் அவசியம்."
 
ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் குறைந்தபட்சம் 6 அடி சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, முகக் கவசம் அணிவது, அடிக்கடி கை கழுவுவது, எச்சில் துப்பாமல் இருப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.
 
தொலைதூரக் கல்வி மற்றும் இணையவழிக் கல்வி முறையை தொடர்ந்து அனுமதித்து, மாணவர்களை ஊக்கப்படுத்துவதை பள்ளிகள் உறுதிப்படுத்த வேண்டும். ஆசிரியர்களின் ஆலோசனைகளைப் பெற 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர விரும்புவதை அனுமதிக்க வேண்டும்.
 
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு வெளியே உள்ள பள்ளிகள் மட்டுமே செயல்பட அனுமதியளிக்கப்படுகிறது. மேலும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அனுமதி கிடையாது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
 
பள்ளிகள் செயல்படத் தொடங்குவதற்கு முன்பு வளாகம் முழுவதும் சுத்தப்படுத்த வேண்டும். குறிப்பாக தனிமை மையங்களாகப் பயன்படுத்தபட்ட பள்ளிகள் முறையாக சுத்தப்படுத்த வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஆசிரியர், மாணவர் உரையாடலை திறந்தவெளியில் நடத்தலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்