யுக்ரேனில் ரஷ்யா ரசாயன ஆயுதத் தாக்குதல் நடத்தலாம் - அமெரிக்கா எச்சரிக்கை

வியாழன், 10 மார்ச் 2022 (14:13 IST)
யுக்ரேனில் ரசாயன அல்லது உயிரியல் ஆயுத தாக்குதலுக்கு ரஷ்யா திட்டமிட்டுக் கொண்டிருக்கலாம். "நாம் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என்று அமெரிக்க அதிபரின் அலுவலகமான வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் ஜென் சாகி, அமெரிக்க உயிரியல் ஆயுத ஆய்வகங்கள் மற்றும் யுக்ரேனில் ரசாயன ஆயுத மேம்பாடு பற்றிய ரஷ்யாவின் கூற்றுகள் அபத்தமானவை என்று கூறியுள்ளார்.

இந்த பொய்யான கூற்றுகள், மேற்கொண்டு அவர்கள் நடத்தவிருக்கும் காரணமற்ற தாக்குதல்களை நியாயப்படுத்த கூறும் "வெளிப்படையான தந்திரம்" என்றும் அவர் கூறினார்.

மேற்கத்திய நாடுகளின் அதிகாரிகள் புதிய தாக்குதல்கள் பற்றி இதேபோன்ற கவலைகளைப் பகிர்ந்து கொண்ட நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்தத் தாக்குதலில் காயமடைந்த ஐந்து வயது சிறுமி ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதனிடையே கார்கிவ் நகரின் அருகே உள்ள ஒரு குடியிருப்பில் ரஷ்ய படைகள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதில் இரண்டு குழந்தைகள் உள்பட நால்வர் பலியானதாக யுக்ரேன் அரசின் அவசரகால சேவைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலில் காயமடைந்த ஐந்து வயது சிறுமி ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

யுக்ரேன் போர்: ரஷ்ய ஆதரவாளர் கருத்தை வெளியிட்ட சீன அரசு ஊடகம்

சீன அரசு ஒளிபரப்பாளரான சிஜிடிஎன்(CGTN) ஊடகத்தில் சில மணிநேரங்களுக்கு முன்பு, ரஷ்யாவின் ஆதரவு பெற்ற, கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியான டொனியட்ஸ்க் பிராந்தியத்தின் தலைவர் டெனிஸ் புஷிலின் உடன் நடந்த போட்டி வெளியாகி உள்ளது.

அதில் சண்டை முடிவுக்கு வர விரும்புவதாகவும், ரஷ்யா முதலில் ராணுவத் தாக்குதலைத் தொடங்கிய போதிலும், யுக்ரேனின் ஆயுதமேந்திய நடவடிக்கைகளே பொதுமக்களின் மரணத்திற்கு வழிவகுத்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த வாரத்தில் டொனெட்ஸ்கின் தலைவர் டெனிஸ் புஷிலினுடன் எடுத்த பிரத்தியேக நேர்காணல்களை, இதுவரையில் இரண்டு ஒளிபரப்பு நிறுவனங்கள் நடத்தி வெளியிட்டுள்ளது. அதில் சீன அரசு ஒளிபரப்பாளரான சிஜிடிஎன் தொலைக்காட்சியும் ஒன்று.

யுக்ரேன்: மகப்பேறு, குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா குண்டுவீச்சு

இதனிடையே, நேற்று யுக்ரேனின் மேரியோபோல் நகரில் உள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனை ஒன்று, ரஷ்ய வான் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளதாக யுக்ரேன் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் இடிபாடுகளுக்குள் மக்கள் சிக்கிக் கொண்டிருப்பதாகவும், இந்தத் தாக்குதலை ஒரு போர்க்குற்றம் என்றும் யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கூறினார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள காணொளியில் தாக்குதலுக்குள்ளான மருத்துவமனை மிக மோசமாக சேதமடைந்துள்ளது தெரிகிறது. இதில் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் உட்பட குறைந்தது 17 பேர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரி யுக்ரேனிய ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

மேரியோபோல் துறைமுக நகரத்தை உள்ளடக்கிய டொனெட்ஸ்க் பகுதியின் நிர்வாகத்தின் தலைவரான பாவ்லோ கைரிலென்கோ கூறுகையில், இந்த தாக்குதலில் இறப்புகள் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், மருத்துவமனையில் இருந்த குழந்தைகள் யாரும் காயப்பட்டு உள்ளதாக தெரியவில்லை, என்றும் கூறினார்.

ரஷ்ய படையினர் மக்கள் வெளியேறுவதற்கான போர்நிறுத்தத்தை அறிவித்த நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது என வொலோடிமிர் ஸெலென்ஸ்கி குறிப்பிட்டிருக்கிறார் என இன்டர்ஃபாக்ஸ் யுக்ரேன் (Interfax Ukraine) வெளியிட்டுள்ள செய்தியில் தெரிகிறது.

மேரியோபோல் நகர சபை இந்த தாக்குதல் "மிகப்பெரிய சேதத்தை" ஏற்படுத்தியிருக்கிறது என்று கூறியுள்ளது. மேலும் அது வெளியிட்டுள்ள காணொளியில், தாக்குதலில் எரிந்த கட்டடங்கள், சேதமடைந்த கார்கள் மற்றும் மருத்துவமனைக்கு வெளியே ஒரு பெரிய பள்ளம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. தாக்குதல் நடந்த காணொளிகள் காட்டும் இடங்களை பிபிசி உறுதிசெய்துள்ளது.

அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, வெளியிட்ட சமீபத்திய காணொளியில் யுக்ரேனிய மொழியில் இல்லாமல் சில இடங்களில் ரஷ்ய மொழியில் பேசினார்.

அதில், இந்த தாக்குதல் ஒரு போர் குற்றம் என்றும் "மருத்துவமனைகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனைகள் மீது கூட பயத்தால் தாக்குதல் நடத்துகிறார்கள். ரஷ்யா எப்படிப்பட்ட நாடு?" என்று கேள்வி எழுப்பினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்