உக்ரைனில் இருந்து வரும் இந்தியர்களுக்காக பயண அறிவுறுத்தல்களில் மாற்றம்

திங்கள், 28 பிப்ரவரி 2022 (16:05 IST)
யுக்ரேனில் இருந்து வரும் இந்தியர்களுக்காக பயண அறிவுறுத்தல்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. 

 
யுக்ரேனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அங்கிருந்து வெளியேற்ற ஏதுவாக, சர்வதேச பயணிகளுக்கான சுகாதாரத்துறை அறிவுறுத்தல்களை இந்திய அரசு மாற்றியிருக்கிறது. இது தொடர்பாக இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய பயண அறிவுறுத்தல் குறிப்பில், யுக்ரேனில் இருந்து வரும் இந்தியர்களுக்கு சில விதிவிலக்குகள் வழங்கப்பட்டுள்ளன. 
 
சர்வதேச விமானங்களில் இந்தியா வரும் பயணிகளுக்கான ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி சான்றிதழ் காண்பிப்பதில் இருந்து இந்திய குடிமக்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.
 
தற்போது ஏர்-சுவிதா இணையதளத்தில் புறப்படுவதற்கு முன் இந்திய பயணிகள் இந்த ஆவணங்களை கட்டாயமாக பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆனால், யுக்ரேனில் இருந்து வரும் தாயகம் வரும் இந்தியர்களுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது
 
தாயகம் வரும் பயணியால் வருகைக்கு முன் ஆர்டிபிசிஆர் பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க முடியாவிட்டாலோ கோவிட்-19 தடுப்பூசி இரண்டு டோஸ்களை போட்டுக்கொள்ள முடியாவிட்டாலோ தாயகம் திரும்பிய 14 நாட்களுக்குள் தங்களின் உடல்நிலையை சுயமாக கண்காணிக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலுடன் தங்களுடைய ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்து முடிவுகளை சமர்ப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்