கன்னியாகுமரியில் கன மழையால் நீர் வரத்து அதிகரிப்பு

வியாழன், 27 மே 2021 (16:09 IST)
ஒடிஷா அருகே யாஸ் புயல் நேற்று முன்தினம் கரையை கடந்த வேளையில், புயல் தாக்கம் காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்தது.
 
கன்னியாகுமரியில் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் நீர்பிடிப்புு் பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் இருந்து 8,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் இருந்து 1,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
 
சிற்றாறு 1,2 அணைகளில் இருந்து இரண்டாயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் இரண்டாவது நாளாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கரையோர பகுதிகளான சிதறால், திக்குறிச்சி, குழித்துறை, மங்காடு, பரக்காணி, முஞ்சிறை, பார்திவபுரம், வைக்கலூர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வசிப்போருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
சூறைக்காற்றுடன் கன மழை பெய்ததால் 100 க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. பல இடங்களில் மரங்கள் முறிந்தது. சாலைகளிலும் தெருக்களிலும் வெள்ளம் புகுந்தது தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதியான முஞ்சிறை, மங்காடு , பார்வதிபுரம் பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் நீர் புகுந்தது. குமரி மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வாழை, ரப்பர், நெல் உட்பட விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
 
குமரி மாவட்டம் முழுவதும் இதுவரை 15 வீடுகள் இடிந்துள்ளன. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளங்கள் நிரம்பி உள்ளன. அதிகபட்சமாக மயிலாடியில் 93.4 மி.மீ, பேச்சிபாறையில் 90.6 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்