இஸ்ரேல் – பாலத்தீனம்: பல தசாப்தங்களாக தொடரும் சண்டைக்கு என்ன காரணம்?

வியாழன், 13 மே 2021 (23:42 IST)
இஸ்ரேலிய ராணுவத்தினருக்கும் பாலத்தீன போராளிகளுக்கும் இடையே காசா பகுதியில் கடுமையாக தாக்குதல் நடைபெற்று வருகிறது.
 
பல தசாப்தங்களாக இஸ்ரேல் மற்றும் பாலத்தீனியத்திற்கு இடையே மோதல்கள் நடந்து கொண்டிருந்தாலும், இந்த சமீபத்திய வன்முறை ஒரு மாதகால பதற்றத்தின் ஒரு பகுதி.
 
இது எவ்வாறு தொடங்கியது?
 
 

 
 

 
பாலத்தீனம் என்னும் மத்திய கிழக்கின் அந்த பகுதியை ஆண்டுவந்த ஓட்டோமான் அரசாட்சியை முதலாம் உலகப் போரில் வீழ்த்திய பின், அந்த பகுதி பிரிட்டனின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
 
அந்த பகுதியில் யூத சிறுபான்மையினரும், அரபு பெரும்பான்மையினரும் குடிபுகுந்தனர்.
 
பாலத்தீனத்தில் உள்ள யூதர்களுக்கு, "தேசியப் பகுதி" ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்ற பொறுப்பை உலக நாடுகள் பிரிட்டனுக்கு வழங்கின. இதில்தான் பதற்றம் தொடங்கியது.
 
யூதர்களைப் பொறுத்தவரை அது அவர்கள் பூர்வீகம். ஆனால் பாலத்தீனிய அரபு மக்களும் அந்தப் பகுதிக்கு சொந்தம் கொண்டாடினர், இந்த நடவடிக்கைக்கு பெரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
 
1948ஆம் ஆண்டு மார்ச் மாதம் அரபு லேஜியன் படைகள், யூத தற்காப்பு படையான ஹகானா மீது தாக்குதல் நடத்திய காட்சி.
 

 
1948ஆம் ஆண்டு மார்ச் மாதம் அரபு லேஜியன் படைகள், யூத தற்காப்பு படையான ஹகானா மீது தாக்குதல் நடத்திய காட்சி.
 
ஐரோப்பாவில் துன்புறுத்தலில் இருந்து தப்பி, இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனியில் நடந்த ஹாலோகாஸ்ட் படுகொலைகளில் இருந்து தப்பி, தாயகம் வேண்டி 1920 - 40 கால கட்டத்தில் அங்கு யூதர்களின் வருகை அதிகரித்தது.
 
யூத அரபு மக்களுக்கு இடையேயும், பிரிட்டனுக்கு எதிராகவும் வன்முறைகள் வெடித்தன.
 
1947ஆம் ஆண்டு பாலத்தீனம் யூதர் மற்றும் அரபு பகுதி என இரண்டாக மாற ஐநா வாக்களித்தது. ஜெருசலேம் சர்வதேச நகரமானது.
 
இந்த திட்டம் யூதத் தலைவர்களால் ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால் அரபு தரப்பில் இது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதை அமல்படுத்தவும் இல்லை.
 
இஸ்ரேல் மற்றும் `பேரழிவின்` தொடக்கம்
1948ஆம் ஆண்டு இந்த பிரச்னைக்கு முடிவு கட்ட இயலாத பிரிட்டன் ஆட்சியாளர்கள் அந்த பகுதியைவிட்டு வெளியேறினர். யூத தலைவர்கள் இஸ்ரேல் உருவானதாக அறிவித்தனர்.
 
அதை பாலத்தீனத்தில் பல்வேறு மக்கள் எதிர்த்தனர். அண்டை நாடுகளை சேர்ந்த படைகள் படையெடுத்து வந்தன.
 
இஸ்ரேல் - காசா: தீவிரமாகும் மோதலால் போர் மூளும் அச்சத்தில் மக்கள்
ரமலான் சமயத்தில் இஸ்ரேல் - பாலத்தீன தரப்பு 3வது இரவாக மோதல்: என்ன நடக்கிறது?
ஆயிரக்கணக்கான பாலத்தீனர்கள் அந்த பகுதியை விட்டு தப்பித்து சென்றனர். பலர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
 
அல் நக்பமா அல்லது பேரழிவு என்று அவர்களால் இது அழைக்கப்படுகிறது.
 
போர் நின்ற ஒரு வருடத்திற்கு பிறகு அந்த பகுதியை பெரும்பான்மையாக இஸ்ரேல் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
 
ஜோர்டான் மேற்கு கரை என்னும் இடத்தை ஆக்கிரமித்தது. எகிப்து காசாவை ஆக்கிரமித்தது.
 
ஜெருசலேத்தின் மேற்கில் இஸ்ரேலிய படைகள் கிழக்கில் ஜோர்டானிய படைகள் என பிரிக்கப்பட்டது.
 
 

 
ஏனென்றால் அங்கு அமைதி ஒப்பந்தம் ஒன்று ஏற்படவே இல்லை. ஒவ்வொரு தரப்பும் பிற தரப்பின் மீது குற்றம் சுமத்தியது. அடுத்த பல ஆண்டுகளுக்கு அங்கு போர்களும் சண்டைகளும் தொடர்ந்தன.
 
1967ஆம் ஆண்டு நடைபெற்ற மற்றொரு போரில், கிழக்கு ஜெருசலேத்தையும், மேற்கு கரையையும், சிரிய கோலன் ஹைட்சின் பெரும்பான்மை பகுதியையும், காசா மற்றும் எகிப்திய சினாய் தீபகற்பத்தையும் இஸ்ரேல் ஆக்கிரமித்தது. பெரும்பாலான பாலத்தீனிய அகதிகள், அவர்களின் சந்ததியினர் காசா மற்றும் மேற்கு கரையிலும், அண்டை நாடுகளான ஜோர்டான், சிரியா மற்றும் லெபனானிலும் வசிக்கின்றனர்.
 
இஸ்ரேல் - பாலத்தீனம்: புதிய சண்டைகளுக்கு வித்திடும் பழைய சிக்கல்கள்
ரமலான் நோன்பு: கொரோனாவுக்கு மத்தியில் இஸ்லாமியர்கள் கடைப்பிடிப்பது எப்படி?
ஆனால் இந்த அகதிகளோ அல்லது அவர்களின் குடும்பத்தினரோ அவர்களின் வீடுகளுக்குத் திரும்ப இஸ்ரேல் அனுமதிக்கவில்லை. இது நாடு யூத நாடாக இருப்பதற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என இஸ்ரேல் தெரிவிக்கிறது. இஸ்ரேல் காசாவிலிருந்து வெளியேற்றப்பட்டாலும் மேற்குக் கரையை இன்றும் ஆக்கிரமித்துள்ளது. மேற்குக் கரையை ஐநா ஓர் ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியமாகவே இன்றும் பார்க்கிறது.
 
1967ஆம் ஆண்டு நடைபெற்ற ஆறு நாள் போருக்கு பிறகு இஸ்ரேலிய படைகள் கிழக்கு ஜெருசலேமை கைப்பற்றிய பிறகு வருகை தரும் இஸ்ரேலிய ராணுவ

1967ஆம் ஆண்டு நடைபெற்ற ஆறு நாள் போருக்கு பிறகு இஸ்ரேலிய படைகள் கிழக்கு ஜெருசலேமை கைப்பற்றிய பிறகு வருகை தரும் இஸ்ரேலிய ராணுவ கமாண்டர்கள்.
 
இஸ்ரேல் ஜெருசலேம் முழுவதையும் தனது தலைநகர் என்று கூறுகிறது. பாலத்தீனம் கிழக்கு ஜெருசலேத்தை தனது எதிர்கால பாலத்தீனிய நாட்டின் தலைநகராக கருதுகிறது. இஸ்ரேல் முழு நகரையும் உரிமை கொண்டாடுவதை அங்கீகரித்துள்ள வெகுசில நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. கடந்த 50 ஆண்டுகளில் இந்த பகுதிகளில் இஸ்ரேல் குடியிருப்புகளை நிறுவியது. தற்போது அங்கு 6 லட்சத்துக்கும் அதிகமான யூதர்கள் வசிக்கின்றனர்.
 
இது சர்வதேச சட்டங்களின்படி தவறு என்றும் அமைதிக்கு தடையாக உள்ளது என்றும் பாலத்தீனம் கூறுகிறது. ஆனால் இஸ்ரேல் அதை மறுக்கிறது.
 
தற்போது என்ன நடக்கிறது?
 

 
கிழக்கு ஜெருசலேம், காசா மற்றும் மேற்கு கரையில் வசிக்கும் இஸ்ரேல் மற்றும் பாலத்தீனியர்களுக்கு இடையே அவ்வப்போது பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
 
பாலத்தீன தீவிரவாத குழுவான ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ளது காசா. இந்த குழு இஸ்ரேலுடன் பலமுறை சண்டையிட்டுள்ளது. ஹமாஸ் குழுவினருக்கு ஆயுதம் செல்வதை தடுக்க இஸ்ரேல் மற்றும் எகிப்து காசா எல்லைகளை தீவிரமாக கட்டுப்படுத்தி வருகின்றன.
 
காசா மற்றும் மேற்கு கரையில் உள்ள பாலத்தீனர்கள், இஸ்ரேலின் நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளால் தங்களுக்கு துயரங்கள் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். ஆனால் இஸ்ரேல் பாலத்தீனத்தின் வன்முறையிலிருந்து தங்கள் நாட்டை காத்துக் கொள்ளவே நடவடிக்கை எடுப்பதாக கூறுகிறது.
 
இந்த ஆண்டு ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் முஸ்லிம்களின் புனித மாதமான ரமலானின் தொடக்கத்திலிருந்து அங்கு பதற்றம் அதிகரித்தது. இரவு நேரங்களில் போலீசாருக்கும் பாலத்தீனர்களுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன.
 
கிழக்கு ஜெருசலேமில் சில பாலத்தீனிய குடும்பங்கள் வெளியேற அச்சுறுத்தப்படுவதும் பதற்றத்தை அதிகரித்தது.
 
முக்கிய பிரச்னைகள் என்ன?
 
இஸ்ரேல் மற்றும் பாலத்தீனம் என இருதரப்பிலும் ஒப்புக் கொள்ளப்படாத பல விஷயங்கள் உள்ளன. பாலத்தீன அகதிகள் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், மேற்கு கரையில் உள்ள யூதக் குடியிருப்புகள் அகற்றப்பட வேண்டுமா, இருதரப்பும் ஜெருசலேத்தை பகிர்ந்து கொள்ள வேண்டுமா? இது எல்லாவற்றையும்விட சிக்கலான ஒன்று உள்ளது. இஸ்ரேலுக்கு பக்கத்தில் பாலத்தீன நகரம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பது போன்ற பல பிரச்னைகள் இருதரப்பிலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அமைதி பேச்சுவார்த்தைகள் 25 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகின்றன. ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
 
எதிர்காலத்தில் என்ன நடக்கும்?
 
சுருக்கமாக சொல்லப்போனால் இந்த பிரச்னைக்கு அவ்வளவு சீக்கிரத்தில் முடிவு எட்டப்போவதில்லை. டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக இருந்த சமயத்தில் அமைதி திட்டம் ஒன்று தயார் செய்யப்பட்டது.
 
இது `நூற்றாண்டுக்கான ஒப்பந்தம்` என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு வர்ணித்திருந்தார். ஆனால் அது ஒருதலைப் பட்சமாக இருப்பதாக பாலத்தீனர்களால் நிராகரிப்பட்டது. இந்த கடினமான பிரச்னையை தீர்க்க இருதரப்பிலும் ஒப்புக் கொள்ளும் ஒரு அமைதி ஒப்பந்தம் ஏற்பட வேண்டும். அதுவரை இந்த சண்டை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்