இந்தியாவில் கொரோனா அலை: ஒரே நாளில் 3,498 பேர் பலி, சோலி சொராப்ஜி இறந்தார்!

வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (12:19 IST)
இந்தியாவில் அதிவேகமாக பரவி வரும் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 3,498 பேர் பலியாகியுள்ளனர் என்கிறது இந்திய அரசின் புள்ளிவிவரம்.
 
இந்த ஒரே நாளில் 3.86 லட்சம் பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டிருப்பதாகவும் இந்திய சுகாதார அமைச்சகம் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட தரவுகள் கூறுகின்றன.
 
இதன் மூலம் அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்பட்ட கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 2.08 லட்சமாக அதிகரித்துள்ளது. மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 1.87 கோடியாக உயர்ந்துள்ளது.
 
இன்னும் குணமடையாமல் சிகிச்சை பெற்று வருகிறவர்களின் எண்ணிக்கை நாட்டில் மொத்தம் 31,70,228 என்கிறது அரசு தரவு. அதைப் போலவே தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை சுமார் 15.22 கோடி.
 
இதனிடையே, இந்திய அரசின் முன்னாள் அட்டர்னி ஜெனரலும், இந்தியாவின் மிக மூத்த வழக்குரைஞருமான சோலி சொராப்ஜி தனது 91-ஆவது வயதில் கொரோனா தொற்றுக்குப் பலியானார் என்று குடும்ப வட்டாரங்களை மேற்கோள் காட்டி சொல்கிறது பிடிஐ செய்தி முகமை.
 
ஏ.என்.ஐ. முகமை தனது ட்வீட்டில் அவரது இறப்பை உறுதி செய்துள்ளது. ஆனால், இறப்புக்கான காரணத்தை அது குறிப்பிடவில்லை.
 
கருத்துரிமையைப் பாதுகாக்கும் அவரது முயற்சிகளை அங்கீகரித்து, 2002ம் ஆண்டு அவருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.
 
அவரது மறைவுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்