இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் குறைகிறது: நிதி ஆயோக் உறுப்பினர்

வியாழன், 10 பிப்ரவரி 2022 (18:57 IST)
நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) வி.கே.பால் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஒட்டுமொத்தமாக கொரோனா தொற்றின் நிலைமை நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.


எனினும், கேரளா, மிசோரம், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இன்னும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை நாம் தளர்த்தக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

இந்த பெருந்தொற்றின் மூலம் நாம் பலவற்றைக் கற்றுக்கொண்டுள்ளோம். ஆனால், இந்த வைரஸ் குறித்து எல்லாவற்றையும் உலகம் இன்னும் அறியவில்லை. இந்த வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் உலகம் ஒன்றாக இணைந்திருக்க வேண்டும். தொற்றை அகற்றுதலில் அனைத்துவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

புனேவில் செயல்பட்டு வரும் ஜெனோவா பயோபார்மகியூடிகல்ஸ் உருவாக்கிய இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் எம்.ஆர்.என்.ஏ கொரோனா தடுப்பூசி தற்போது மருத்துவப் பரிசோதனையில் உள்ளது. அதனை ஒருநாள் பயன்படுத்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

தடுப்பூசி செலுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதில் மகிழ்ச்சி. 96% பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர் என்பது நினத்துக்கூட பார்க்க முடியாதது. எந்தவொரு அரசுக்கும் இது ஒரு கனவாகும். தடுப்பூசி செலுத்துவது இன்னும் வலுப்பெற்று வருகிறது” என்கிறார் அவர்.

மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால் பேசுகையில், “ஜனவரி 24 அன்று தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 20.75% என்ற அளவில் இருந்தது. இப்போது, 4.44% என்ற அளவில் பாதிப்பு விகிதம் குறைந்துள்ளது. இது, தொற்று பாதிப்பு விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதைக் காட்டுகிறது” என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்