சுற்றுச்சூழலை இப்படியும் காக்கலாமா? ஆச்சரியம் தரும் புதிய வழிமுறை

செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (23:47 IST)
பருவநிலை மாற்றம்
 
உலகம் முழுக்க, மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பசுங்குடில் வாயுக்கள் வளி மண்டலத்தில் கலந்து விடாமல், அதைக் கண்டுபிடித்து அழிக்கும் வேலையில் பல அணிகள் செயல்பட்டு வருகின்றன.
 
இதில் சில வாயு, குளிர்சாதன இயந்திரங்களில் பயன்படுத்தப்படுகிறது. உலக வெப்பமயமாதல் பிரச்னைக்கு கரியமில வாயு பங்களிப்பதை விட பல மடங்கு அதிகம் பங்களிப்பை வழங்குகிறது இந்த பசுங்குடில் வாயுக்கள்.
 
கெளதிமாலா நகரத்தின் புறநகர் பகுதியில் ஏஞ்சல் டொலெடோ என்பவர் கழிவுகளை அகற்றும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவரது நிறுவனம் உலோகம், பிளாஸ்டிக், கண்ணாடி போன்றவைகளைக் கையாளுகிறது.
 
கடந்த மூன்று ஆண்டுகளாக இவர்கள் குளிர்சாதன வாயுக்களை கையாள்கிறார்கள். குளிர்சாதன பெட்டி போன்ற குளிர்விக்கும் இயந்திரங்களில் இருக்கும் பசுங்குடில் வாயுக்களை, 'ரெப்ரெஜிரென்ட் ரெகவரி இயந்திரம்' மூலம் சேமிக்கிறார்கள்.
 
அதன் பின்அதை ஒரு பெரிய டேங்கரில் சேமித்து வைக்கிறார்கள். அந்த டேங்கர் முழுமையாக பசுமையில்ல வாயுக்களால் நிரம்பிய பின், அதை அழிக்கிறார்கள்.
 
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஏஞ்சல் எடுத்த வெளிப்படையான நடவடிக்கை இது.
 
"நான் முழுமை அடைந்ததாக நினைக்கிறேன்" என்கிறார் ஏஞ்சல். "நான் 16 ஆண்டுகளாக இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறேன். பிளாஸ்டிக், கண்ணாடி போன்ற மற்ற கழிவுப் பொருட்களைக் கையாண்டு வருகிறேன். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தான் குளிர்சாதன பொருட்களில் இருக்கும் பசுமையில்ல வாயுக்களைக் கையாளுகிறேன்".
 
"சுற்றுச்சூழலுக்கு உதவுவது என்பது ஒரு கனவு போலத் தோன்றுகிறது. நம் வளிமண்டலத்தில் இந்த பசுமையில்ல வாயுக்கள் கலப்பதைத் தடுக்க வேண்டும். இப்பணிகள் மூலம் நம் பூமிக்கு உதவுவது பெருமகிழ்வைக் கொடுக்கிறது. இது எனக்கு மிகவும் முக்கியமானது" என்கிறார் டொலெடோ.
 
பருவநிலை மாற்றம்
ஆனால் எல்லோரும் குளிர்சாதன சிலிண்டர்கள் அல்லது குளிர்சாதனப் பெட்டிகளை முறையாக, சரியான வழியில் அப்புறப்படுத்துவதில்லை.
 
துரதிருஷ்டவசமாக, நாங்கள் சந்திக்கும் மிகப் பெரிய சவாலே, மக்கள் குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் குளிர்சாதன பொருட்களை அப்புறப்படுத்தும் போது கடைபிடிக்கும் வழிமுறைகளை மாற்றுவது தான் என விவரிக்கிறார்.
 
"அவர்கள் கையாளும் இயந்திரங்களில் இருக்கும் பசுமையில்ல வாயுக்களைத் திறந்துவிடுகிறார்கள். அது நம் வளிமண்டலத்தைச் சென்றடைகிறது"
 
இந்த பசுமையில்ல வாயுக்கள் புவியை பாதிக்காமல் தடுக்க பணியாற்றும் மக்களில் ஒருவராக இருக்கிறார் ஏஞ்சல். டிரேட்வாட்டர்ஸ் என்கிற நிறுவனத்தின் அணியினர், பசுமையில்ல வாயுக்களைக் கண்டுபிடிக்கவும், அதைப் பாதுகாக்கவும், பாதுகாப்பான முறையில் அழிக்கவும் உலகம் முழுக்க உள்ள அரசாங்கங்களோடும், தனியார் நிறுவனங்களோடும், தனி நபர்களோடும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.
 
குளிர்சாதன பொருட்களின் உரிமையாளர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து அவர்களுக்கு அனுமதி கிடைத்த உடன், அவர்கள் அதை பாதுகாப்பாக அப்புறப்படுத்தக் கூடிய இடத்துக்கு எடுத்துச் செல்கிறார்கள்.
 
இந்த அணியினரை 'கோஸ்ட் பஸ்டர்ஸ்' என்று அழைக்கிறார்கள். அவர்கள் மிகத் தீவிரமாக பசுங்குடில் வாயுக்களைப் பின் தொடர்ந்து, அது நம் வளிமண்டலத்தில் கலந்து பருவநிலை சீர்கேடுகள் ஏற்படுத்துவதற்கு முன் அதை அழிக்கிறார்கள். சில நேரங்களில் அவர்கள் 'சில் ஹண்டர்ஸ்' என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
 
கிட்டத்தட்ட எல்லா குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் ஏசி எனப்படும் குளிர்சாதன இயந்திரத்தில் குளிர் அல்லது வெப்பத்தைக் கடத்த ஏதாவது ஒரு வாயுவைப் பயன்படுத்துவார்கள்.
 
பருவநிலை மாற்றம்
கடந்த நூற்றாண்டில் சிஎஃப்சி என்றழைக்கப்பட்ட குளோரோ ஃப்ளூரோ கார்பன் மற்றும் ஹெச் சி எஃப் சி என்றழைக்கப்பட்ட ஹைட்ரோ குளோரோ ஃப்ளோரோ கார்பன் போன்ற வாயுக்கள் தான் பெரிதும் பயன்படுத்தப்பட்டன. இந்த வாயுக்கள் ஓசோன் படலத்தில் ஓட்டையை உண்டாக்குகிறது என்பதைக் கண்டு பிடித்த பின், 1980-ம் ஆண்டு மான்ட்ரியல் சட்ட திட்டங்கள் படி, அவ்வாயுக்கள் தடை செய்யப்பட்டன.
 
அதில் சில வாயுக்கள் மிகவும் மோசமானவைகளாக இருந்தன. ஆர்12 எனப்படும் குளோரோ ஃப்ளோரோ கார்பன், கார்பன் டை ஆக்ஸைட் வளிமண்டலத்தில் ஏற்படுத்தும் விளைவுகளை விட 10,000 மடங்கு அதிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. 131 டன் கார்பன் டை ஆக்ஸைட் வளிமண்டலத்தில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துமோ, அவ்விளைவை இந்த ஆர்12 ரக வாயுவின் 30 பவுண்ட் வாயு ஏற்படுத்திவிடும்.
 
இந்த பசுமையில்ல வாயுக்களுக்கு பதிலாக, ஹெச் எஃப் சி என்றழைக்கப்படும் ஹைட்ரோ ஃப்ளோரோ கார்பன்கள் கொண்டு வரப்பட்டன. ஆரம்ப காலத்தில் வந்த, ஹெச் எஃப் சி ரக வாயுக்களிலும் சில வாயுக்கள் ஓசோன் படலத்தை பாதிப்பதாக இருந்தன. அவை மான்ட்ரியல் சட்டப் படி தடை செய்யப்பட்டன.
 
தற்போது குளிர்சாதன இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் வாயுக்கள் முன்பை விட சட்டப்படி மேம்பட்டவையாக இருக்கின்றன. ஆனால் இப்போதும் கார்பன் டை ஆக்ஸைடை விட பல மடங்கு வளிமண்டலத்துக்கு தீங்கு விளைவிப்பவையாக இருக்கின்றன.
 
பருவநிலை மாற்றம்: 2020இல் உலகம் சந்தித்த பேரிழப்புகள்
பருவநிலை மாற்றம் என்றால் என்ன? - ஓர் எளிய விளக்கம்
ஹெச் எஃப் சி வாயுக்களை வளிமண்டலத்தில் கலப்பதைப் குறைத்தால், உலக வெப்பமயமாதல் 0.5 டிகிரி செல்சியஸ் குறையும் என விஞ்ஞானிகள் மதிப்பீடு செய்திருக்கிறார்கள்.
 
பழைய குடோன்களில் வைக்கப்பட்டிருக்கும் அல்லது கழிவுப் பொருட்களை அப்புறப்படுத்தும் இடங்களில் தூக்கி எரியப்பட்டிருக்கும் வாயு டேங்கர்கள், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் குளிர்சாதனப் பெட்டிகளைத் தேடுகிறது டிரேட்வாட்டர் அமைப்பு.
 
சில நேரங்களில் டிரேட்வாட்டர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் செல்வதற்கு முன்பே, பசுமையில்ல வாயுக்கள் நிறைந்த டேங்குகளிலிருந்து வாயுக்கள் வெளியேறி இருக்கும். துருப்பிடித்த குழாய்கள் மூலம் வாயுக்கள் எப்போதோ வெளியேறி இருக்கும்.
 
"இந்த பசுமையில்ல வாயுக்கள் எங்கும் நிறைந்திருக்கின்றன. குளிர்சாதன இயந்திரங்கள் பயன்பாட்டில் இருக்கிறதோ இல்லையோ, அவைகள் அதிக அளவில் சரக்குகளாக வாங்கி சேமித்து வைக்கப்படுகின்றன அல்லது சட்ட விரோதமாக ஒரு நாட்டில் இறக்குமதி செய்யும் போது பல வருடங்களுக்கு முன்பு பறிமுதல் செய்து வைக்கப்பட்டு இருக்கின்றன," என்கிறார் டிரேட் வாட்டர் அமைப்பின் சர்வதேச திட்டங்களின் இயக்குநர் மரியா கூட்டரெஷ்.
 
பருவநிலை மாற்றம்
பிரிட்டனில் பயன்படுத்தப்படும் குளிர்சாதனப் பெட்டிகள், ஃப்ரீசர்கள், ஏசி போன்ற இயந்திரங்களில் புவியை வெப்பமாக்கும் வாயுக்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன. அவை முறையாக அப்புறப்படுத்தப்பட வேண்டும்.
 
டிரேட்வாட்டர் அமைப்பு, இதுவரை சுமார் 4 - 5 மில்லியன் டன் கார்பன் டை ஆக்ஸைடுக்கு சமமான பசுங்குடில் வாயுக்களை வளிமண்டலத்தில் கலக்காமல் மீட்டிருப்பதாகக் கூறுகிறது.
 
"நாங்கள் வெறுமனே ஒரு சிறு துளியைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இன்னும் நிறைய பசுங்குடில் வாயுக்கள் வெளியே இருக்கின்றன," என்கிறார் டிரேட்வாட்டர் அமைப்பின் தலைவர் மரியா கூட்டரெஷ்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்