பெய்ரூட் வெடிப்பு: இடிபாடுகளுக்கு இடையே இதயத் துடிப்பை தேடும் மக்கள்

வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (10:00 IST)
பெய்ரூட் வெடிப்பு நடைபெற்று கிட்டதட்ட ஒரு மாதமாகிறது. கிடங்கில் உரிய பாதுகாப்பு இல்லாமல் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட்டின் காரணமாகவே இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறினார்  அந்நாட்டு அதிபர் மைக்கேல் ஆன்.

இந்த விபத்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள், 3 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்களின் வீடுகளை இழந்துள்ளனர்.
 
போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே இரவு பகலாக மோதல்கள் நடந்தன. அரசு பதவி விலகியது. இருப்பினும் அது போராட்டக்காரர்களை  சமாதானப்படுத்தவில்லை.
 
இந்த சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்து 240 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிழக்கு மத்திய தரைக்கடலில் இருக்கும் சைப்ரஸ் தீவில் இந்த வெடிப்பின் சத்தம்  கேட்டதாக கூறப்படுகிறது.
 
நாயின் அழைப்பு
 
இந்நிலையில் ஒரு மாதத்திற்கு பிறகு வெடி விபத்தில் இடிந்த வீடுகளின் இடிபாடுகளுக்கு மத்தியில் மீட்புப் பணியாளர்கள் இதயத் துடிப்பை தேடி வருகின்றனர்.
 
புதன் காலை பெய்ரூட்டின் மார்க் மிக்கேல் பகுதிக்கு சிலி நாட்டிலிருந்து வந்த மீட்புப் குழுவினர் பணிக்கு வந்தவுடன் அங்கு கூட்டம் கூடியது. ஆனால் யாரேனும்  இடிபாடுகளுக்கு மத்தியில் உயிருடன் இருக்கிறார்களா என்பது உறுதியாக தெரியவில்லை.
 
புதன் இரவு, மீட்புப் பணியாளர்கள் ஒரு கட்டடத்தை கடந்து சென்றபோது அவர்களின் நாய் ஒன்று யாரோ அங்கு உயிருடன் இருப்பதுபோல் சமிக்ஞை தந்தது.
 
மீண்டும் வியாழன் காலை அதே கட்டடத்தின் அருகில் அந்த நாய் அதே சமிக்ஞையை தந்தது. அதன்பிறகு அந்த குழு ஸ்கேன் கருவி மூலம் இதய துடிப்போ  அல்லது யாரேனும் மூச்சுவிடுவதோ தெரிகிறதா என தேடினர். இடிபாடுகளை அகற்றும் கருவிகளையும் கொண்டு வந்தனர்.
 
மீட்புப் பணியாளர்கள் ஏழு குழுக்களாகப் பிரிந்து சிறிய சிறிய துண்டுகளாக இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்புப் பணியாளர்கள் இதயத்  துடிப்பு ஏதும் இருந்தால் அதை ஆழமாக கேட்கும் வகையில் அவ்வப்போது கூட்டத்தில் அமைதி காக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்படுகிறது என்கிறார் களத்திலிக்கும் பிபிசி செய்தியாளார் ஒர்லா குவாரின்.
 
லெபனானிற்கு சிலி மிட்புப் பணியாளர்கள் செப்டம்பர் 1ம் தேதி வந்தனர். அவர்களிடம் 15 மீட்டர் நீளத்தில் மூச்சை கண்டறியும் கருவிகள் இருப்பதாக உள்ளூர் செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
இடிபாடுகளுக்கு இடையில் யாரேனும் உயிருடன் இருக்கிறார்களா என்பது உறுதியாகத் தெரியவில்லை ஆனால் பலர் நம்பிக்கையுடன் ஒவ்வொரு நிமிடமும் அந்த  இடிபாடுகளுக்கு நடுவில் யாராவது உயிர் பிழைத்திருக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்