பிரிட்டன் தேர்தல் 2019: கவனிக்க வேண்டிய முக்கிய 10!!

சனி, 14 டிசம்பர் 2019 (14:44 IST)
பிரிட்டனில் (டிசம்பர் 12) நடைபெற்ற பொதுத் தேர்தலின் முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த தேர்தல் தொடர்பான 10 முக்கிய தகவல்கள் இவை.
 
1. இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய நான்கு நாடுகள் சேர்ந்ததுதான் பிரிட்டன் எனவே இந்த நான்கு நாடுகளில் உள்ள 650 தொகுதிகளில் நேற்று பொதுத் தேர்தல் நடைபெற்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
2.இந்த தேர்தலில் மொத்த 3322 வேட்பாளர்கள் களமிறங்கினர்.
3.முடிவுகள் ஏறத்தாழ வந்துவிட்ட நிலையில், அந்நாட்டின் கன்சர்வேடிவ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
4.தொடர்ந்து நான்காவது முறையாக தோல்வியை சந்திக்கும் தொழிலாளர் கட்சிக்கு இது பலத்த அடியாக பார்க்கப்படுகிறது. பிரிட்டனின் இரண்டு முக்கிய கட்சிகளாக இந்தக் கட்சிகளும் உள்ளன.
5.கடந்த 1987ஆம் ஆண்டிற்கு பிறகு கன்சர்வேடிவ் கட்சி பெறும் மிகப்பெரிய வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.அதேபோல் 1935ஆம் ஆண்டிற்கு பிறகு தொழிலாளர் கட்சி பெறும் மோசமான தோல்வியாக இது அமையும் என்று கூறப்பட்டுள்ளது.
6.அடுத்த பொதுத் தேர்தலில் தனது கட்சியை வழிநடத்த போவதில்லை என ஜெர்மி கோபின் தெரிவித்துள்ளார்.
7.இந்த தேர்தலை பொறுத்தவரை பிரெக்ஸிட்டே முக்கிய அம்சமாக பார்க்கப்பட்டது. பிரெக்ஸிட் என்பது பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது ஆகும். இதற்கான கருத்தறியும் வாக்கெடுப்பு 2016ஆம் ஆண்டு நடைபெற்றது.
8.முன்னதாக போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவியேற்றபோது அக்டோபர் 31ஆம் தேதிக்குள் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் என தெரிவித்திருந்தார் போரிஸ் ஜான்சன். தற்போது அவர்களுக்கு நாடாளுமன்றத்தில் பெருன்பான்மை கிடைத்துள்ளதால் பிரெக்ஸிட்டிற்கான ஆதரவு பெறுவதில் எந்த சிக்கலும் இல்லை.
9.கன்சர்வேடிவ் கட்சி, தொழிலாளர் கட்சி, தாராளவாத ஜனநாயகவாதிகள், ஸ்காடிஷ் தேசிய கட்சி, கிரீன் கட்சி, பிரெக்ஸிட் கட்சி, பிளைட் சிம்ரு கட்சி ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர்.
10.போரிஸ் ஜான்சன், ராணி எலிசபெத்தை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்