ஜெ. ரத்த காயங்களோடு அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார் - பொன்னையன் பகீர் தகவல்

திங்கள், 6 மார்ச் 2017 (10:18 IST)
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ரத்த காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற பகிர் தகவலை அதிமுக மூத்த நிர்வாகி பொன்னையன் தெரிவித்துள்ளார்.


 

 
ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஓ.பி.எஸ் அணி கோரிக்கை வைத்துள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல், மரணம் அடைந்த வரை எழுந்த ஏராளமான சந்தேகங்களையும், கேள்விகளையும் அவர்கள் எழுப்பி வருகின்றனர்.
 
இந்நிலையில், ஓ.பி.எஸ் தனது ஆதரவாளர்களுடன் நேற்று இரவு முழுவதும், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனது விட்டில் ஆலோசனை நடத்தியதாக செய்தி வெளியாகியுள்ளது. அதில், முன்னாள் அமைச்சர் மாஃபா பண்டியராஜன், அதிமுக எம்.எல்.ஏ செம்மலை, பொன்னையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
 
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பொன்னையன் “செப்டம்பர் 22ம் தேதி இரவு, போயஸ்கார்டன் வீட்டில் ஜெயலலிதா தாக்கப்பட்டு கீழே விழுந்துள்ளார். எங்கள் அனைவரின் கண்களிலும் மிளகாய்பொடியை தூவிவிட்டு, கன்னத்தில் ரத்த காயங்களுடன், அனாதையைப் போல் அவரை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஜெயலலிதா கீழே தள்ளிவிடப்பட்டதை நேரில் பார்த்த வேலைக்காரப் பெண் காணவில்லை. அவர் தற்போது எங்கே இருக்கிறார் எனத் தெரியவில்லை. 
 
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது, அவர் நன்றாக இருக்கிறார். இட்லி சாப்பிட்டார் என நாங்கள் சொன்னோம். தம்பிதுரை எங்களை அப்படி சொல்ல சொன்னார். அவர் கூறியதைத்தான் நாங்கள் செய்தியாளர்களிடம் கூறினோம்” எனக் கூறினார். இந்த விவகாரம் அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்