விவசாயிகள் போராட்டம் முதல் ஒமிக்ரான் வரை..! – டாப் 10 நிகழ்வுகள்!

செவ்வாய், 28 டிசம்பர் 2021 (14:47 IST)
2021ம் ஆண்டு முடிந்து புதிய ஆண்டு தொடங்க உள்ள நிலையில் இந்த ஆண்டில் தேசிய அளவில் நடந்த மிக முக்கியமான நிகழ்வுகளின் டாப் 10 நிகழ்வுகளை வழங்குகிறோம்..

10. ஒமிக்ரான் பரவல்

தென் ஆப்பிரிக்காவிலிருந்து கொரோனாவின் வீரியமடைந்த வேரியண்டான ஒமிக்ரான் உலக நாடுகளில் பரவியது. இந்தியாவிலும் பல மாநிலங்களில் ஒமிக்ரான் பரவ தொடங்கியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 500ஐ தாண்டியுள்ளது. இதனால் பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

9. நிலக்கரி தட்டுப்பாடு

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வரும் நிலக்கரி சுரங்கங்களில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் அனல்மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், மின்சார உற்பத்தியும் பாதிக்கப்பட்டது.

8. டக்தே புயல்

அரபிக்கடலில் உருவான டக்தே புயல் குஜராத் – மும்பை இடையே கரையை கடந்தது. 220 கி.மீ வேகத்தில் காற்று வீசியதால் பல பகுதிகளில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. பலர் வீடுகள், வாழ்வாதாரத்தை இழந்தனர். சுமார் 146 பேர் புயலால் பலியானார்கள்

7. பழங்குடி மக்கள் கொலை

நாகலாந்தி பணிக்கு சென்று திரும்பிய பழங்குடி மக்களை பயங்கரவாதிகள் என நினைத்து ராணுவத்தினர் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த துப்பாக்கி சூட்டில் 17 பேர் உயிரிழந்த நிலையில் அப்பகுதி பழங்குடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

6. ஏர் இந்தியா விற்பனை

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் நஷ்டம் காரணமாக தனியாருக்கு ஏலத்திற்கு விடப்பட்டது. நீண்ட நாட்களாக ஏலத்தில் பெரும் நிறுவனங்கள் ஆர்வம் காட்டாத சூழலில் ஏர் இந்தியாவை டாடா நிறுவனம் ரூ.18,000 கோடி மதிப்பிற்கு, கடன்களுடன் வாங்கியது.

5. முதல்வர்கள் விலகல்

பஞ்சாபில் முதல்வராக பதவி வகித்த அமரீந்தர் சிங் பதவி விலகியதோடு, காங்கிரஸ் கட்சியிலிருந்தும் விலகினார். குஜராத் முதல்வராக பதவி வகித்த விஜய் ரூபானி பதவி விலகினார். கர்நாடகாவில் எடியூரப்பா பதவி விலகினார்.

4. உத்தரகாண்ட் மேகவெடிப்பு

உத்தரகாண்ட் மாநிலத்தின் ராம்கர் பகுதியில் ஏற்பட்ட திடீர் மேகவெடிப்பால் நிலச்சரிவு, வெள்ளம் ஏற்பட்டது. பல வீடுகள், குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் சுமார் 200க்கும் அதிகமானோர் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.

3. தடுப்பூசியில் சாதனை

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த கடந்த ஜனவரி முதலாக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு முகாம்கள் உள்ளிட்டவை அமைத்து மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் இந்தியா 100 கோடி டோஸ்களுக்கு மேல் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்தது.

2. பிபின் ராவத் மறைவு

ஊட்டி அருகே குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்தார். இந்த விபத்தில் அவரது மனைவி மற்றும் உடன் பயணித்தவர்கள் உட்பட 14 பேரும் பலியான சம்பவம் தேசிய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

1. வேளாண் சட்டம் ரத்து

மத்திய அரசு கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் அமல்படுத்திய வேளாண் சட்டத்தை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலத்தை சேர்ந்த விவசாயிகளும் டெல்லியில் போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக கொரோனா ஆபத்தையும் மீறி அவர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் வேளாண் சட்டங்கள் மத்திய அரசால் திரும்ப பெறப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்