ஜப்பானில் சிக்கிய அமெரிக்கர்கள்: விமானத்தை கொண்டு வந்து மீட்ட அமெரிக்கா!

செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (09:07 IST)
கோப்புப்படம்
ஜப்பான் துறைமுகத்தில் கொரோனா வைரஸால் கடலில் நிறுத்தப்பட்ட கப்பலில் இருந்த அமெரிக்கர்களை அமெரிக்க அரசு விமானம் மூலம் மீட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பீதி அதிகரித்துள்ள நிலையில் ஜப்பான் துறைமுகத்துக்கு வந்த ’டைமண்ட் பிரின்சஸ்’ என்ற கப்பலில் உள்ள பயணிகளில் சிலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனால் கப்பலில் இருந்து எந்த பயணியையும் வெளியேற்றாமல் துறைமுக பகுதியில் நிறுத்தி வைத்தது ஜப்பான் அரசு. அந்த கப்பலில் 138 இந்தியர்கள் உட்பட 3 ஆயிரத்து 711 பேர் சிக்கி தவித்து வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி அந்த கப்பலில் உள்ள 355 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கப்பலில் சிக்கியுள்ள பல நாட்டு மக்களையும் மீட்க அந்நாட்டு அரசுகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. அதன் முதற்கட்டமாக கப்பலில் சிக்கிய அமெரிக்கர்களை மீட்க சிறப்பு விமானங்களை அனுப்பியுள்ளது அமெரிக்கா. ஜப்பான் தலைநகர் டோக்கியோ விமான நிலையத்திற்கு சென்ற அந்த விமானத்தில் அமெரிக்க பயணிகள் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் சிலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்