கொரோனா வந்துட்டா இறுதி சடங்கு இலவசம்! – விமான நிறுவனத்தின் பகீர் விளம்பரம்

வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (10:23 IST)
துபாயை மையமாக கொண்ட எமிரேட்ஸ் நிறுவனம் தங்கள் விமானத்தில் பயணிப்பவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் செலவுகளை ஏற்பதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோன பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் அதற்கான மருத்துவ செலவுகளுக்கும் லட்சக்கணக்கில் செலவாகிறது. இதனால் மக்கள் பலர் ஹெல்த் இன்சூரன்ஸ் செய்து வைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் காப்பீடு செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது கொரோனா பாதிப்பினால் விமான பயணத்திற்கே பலர் தயக்கம் காட்டி வரும் நிலையில், விமான நிறுவனங்கள் கொரோனா காப்பீடு வசதியை ஆரம்பிக்க தொடங்கியுள்ளன. அதன்படி அரபு எமிரேட்ஸ் நிறுவனமானது மருத்துவ காப்பீட்டுடன் கூடிய பயண வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. கொரோனா இல்லாத நிலையில் பயணி ஒருவர் எமிரேட்ஸில் பயணித்து கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அவருக்கான மருத்துவ செலவுகளை எமிரேட்ஸ் நிறுவனமே ஏற்கும்.

துரதிர்ஷ்ட வசமாக கொரோனா பாதிக்கப்பட்டவர் இறக்க நேரிட்டாலும் அவரது உடலை சொந்த நாட்டுக்கு கொண்டு செல்லுதல் மற்றும் இறுதி மரியாதைக்கான நிதி உதவியை எமிரேட்ஸ் வழங்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் எமிரேட்ஸில் பயணிக்கும் முன்னர் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்படவும், ஒவ்வொரு முறையும் விமானத்தை தூய்மைப்படுத்தவும் எமிரேட்ஸ் ஏற்பாடு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்