காலக்கெடுவிற்கு ஒரு மாதத்திற்கு முன்பே முழுமையாக வறுமையை விலக்கியது சீனா

செவ்வாய், 24 நவம்பர் 2020 (23:16 IST)
மனிதர்களுக்கு ஆரோக்கியமான வாழ்வு எவ்வளவு முக்கியமானதோ, அவ்வளவு முக்கியமானது வறுமையற்ற வாழ்வும், வறுமை மிக கொடியது, அதிலும் இளமையில் வறுமை கொடுமையிலும் கொடுமை என்பதை அனைவருமே அறிவோம். உணவு  அற்ற நிலை என்பது மட்டும் வறுமை இல்லை. நல்ல குடிநீர் சுகாதாரமான வாழ்விடம், நல்ல ஆடை, கல்வி போன்ற அடிப்படை தேவைகள் கிடைக்காமல் இருப்பதும் வறுமையாகும். இத்தகைய அடிப்படை தேவைகளையும், வறுமையற்ற வாழ்க்கையையும் மக்களுக்கு அமைத்துக் கொடுக்க வேண்டியது ஒரு அரசின் தலையாய கடமையாகும். 
 
உலக அளவில் வறுமை நிலையில் அதிகமான மக்கள் வாழும் நாடுகள் ஆசியாவிலும் ஆப்பரிக்கா கண்டத்திலும் இருப்பதாக தெரியவந்துள்ளது. 1990க்கும் 2015ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில்,சர்வதேச வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் மக்களின் எண்ணிக்கை 1.9 பில்லியனில் இருந்து 735 மில்லியனாகக் குறைந்துள்ளது. அதாவது வரையறையின்படி, ஏழ்மையில் உள்ள மக்கள் தொகையின் பங்கு அதே காலக்கட்டத்தில் 36 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைந்துள்ளது.
 
2012 ஆம் ஆண்டில் சீனா வறுமை ஒழிப்புக்கு முன்னுரிமை கொடுத்து  வளர்ச்சித்திட்டதை முன்னெடுக்க தொடங்கியது. சீனா இன்று உயர் நடுத்தர வருமானம் கொண்ட ஒரு நாடு மற்றும் உலகளவில் இரண்டாவது பெரிய பொருளாதாரம் என்றாலும், அங்கு இன்னும் சில வறிய இடங்களும் உள்ளன.  
 
2013- இல் சீனாவில் 832 வறிய மாவட்டங்கள் இருந்தன. 80 மில்லியனுக்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் வறுமையில் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் 2020-ஆம் ஆண்டு இறுதிக்குள் கிராமப்புறங்களில் தீவிர வறுமையை ஒழிப்பதற்கு இலக்கு நிர்ணயித்தது. பல ஆண்டுகளாக நடந்த கடுமையான முயற்சிகளுக்கிடையில் தற்போது அது இறுதி மற்றும் மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.
 
சீனாவின் சமநிலையற்ற பிராந்திய வளர்ச்சி முக்கியமாக அதன் இயற்கை நிலைமைகளால் ஏற்படுகிறது. 2013-ஆம் ஆண்டில் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட அனைத்து 832 மாவட்டங்களும் மேற்கு மற்றும் மத்திய சீனாவில் அமைந்துள்ளன. இதற்கிடையில், நாட்டின் கிழக்கு கடற்கரையில் உள்ள ஒன்பது மாகாணங்கள் மற்றும் நகராட்சிகளுக்கு வறிய மாவட்டங்கள் பட்டியலில் இருந்து விடுபட்டுள்ளது. 
 
குறிப்பாக தென்மேற்கு மாகாணமான குய்சோவில் ஒன்பது வறிய மாவட்டங்கள் கடந்த 23-ஆம் தேதி வறுமை பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே சீனா  முழுமையான வறுமையை நீக்கியுள்ளது.
 
கடந்த வாரத்தில் தன்னாட்சி பிராந்தியங்களில் உள்ள அதிகாரிகள் விரிவான ஆய்வுகளைத் தொடர்ந்து தங்கள் வட்டாரங்களை முழுமையான வறுமை இல்லாததாக அறிவித்துள்ளனர். அவற்றில் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சி பிரதேசம், நிங்சியா ஹுய் தன்னாட்சி பிரதேசம், குவாங்சி ஜுவாங் தன்னாட்சி பிரதேசம், யுன்னான் மாகாணம், சிச்சுவான் மாகாணம் மற்றும் கன்சு மாகாணம் ஆகியவை அடங்கும். முழுமையான வறுமைக்கு எதிரான வெற்றியை அறிவிக்கும் இறுதி மாகாண அளவிலான பகுதி குய்சோ ஆகும். சீனாவின் வறுமைக் கோடு 2010-ல் ஆண்டுக்கு 2,300 யுவான் அல்லது ஒரு நாளைக்கு ஒரு டாலருக்கு சற்று குறைவாகவே இருந்தது. நாட்டின் வறுமைக் கோடு என்பது நிலையானதில்லை. ஆனால் 2010 ஆம் ஆண்டை ஒரு அடிப்படையாகப் பயன்படுத்தி கிராமப்புற மக்கள் எதிர்கொள்ளும் பணவீக்க அழுத்தத்தை பிரதிபலிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சரி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
2020 இறுதிக்குள் தீவிர வறுமையை ஒழிக்கும் இலக்கை சீனா நிர்ணயித்துள்ளது. திபெத் தன்னாட்சி பிரதேசம் நாட்டில் மிகவும் வறிய பகுதியாக இருந்தது, 74 மாவட்டங்கள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஏழு ஆண்டுகளில், சீனாவில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 10 மில்லியன் மக்கள் வறுமையின் பிடியில் இருந்து மீட்கப்பட்டனர். ஏப்ரல் மாதத்தில் சீனா கோவிட்-19 தொற்றுநோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த நிலையில், பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கின. இது வறுமை ஒழிப்பு முயற்சிகளை மேலும் அதிகரிக்க உதவியது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்