கொரோனா வைரஸால் பல நாடுகளில் பொருளாதார வீழ்ச்சி, சுற்றுலா சேவைகள் நிறுத்தம் போன்ற பலவற்றையும் மக்கள் சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில் ஆஸ்திரேலியா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் டாய்லெட் பேப்பர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் டாய்லெட் பேப்பரின் விலை எகிறியுள்ளது.
அதே போல் ”ஒரு ரோல் டாய்லெட் பேப்பரின் விலை 3,999 டாலர்கள். அது வாங்கினால் ஒரு கேரட் வைர மோதிரம் ஃப்ரீ” என்ற வாசகங்கள் அடங்கிய புகைப்படத்தை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஒ, எலான் மஸ்க் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
இதன் அடுத்த கட்டமாக ஆஸ்திரேலியாவின் என்.டி.நியூஸ் என்ற செய்தித்தாள் நிறுவனம், தங்களது செய்திதாள்களை வெற்று காகிதமாக 8 பக்கங்களை வைத்து விற்பனை செய்து வருகிறது. அதன் முதல் பக்கத்தில், எங்கள் வாசகர்களாகிய உங்களிடம் டாய்லெட் பேப்பர் தீர்ந்தால், நாங்கள் வழங்கிய இந்த வெற்று பக்கங்களை கிழித்து டாய்லெட் பேப்பராக பயன்படுத்திக் கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளது. கொரோனா வைரஸால் வெளிநாடுகளில் அத்தியாவசிய பொருளான டாய்லெட் பேப்பர் தட்டுப்பாடு ஒரு பக்கம் நிலவி வரும் நிலையில், இது போன்ற நகைச்சுவையான பல மீம்கள் நெட்டிசன்களால் வைரலாக பகிரப்படுகின்றன.