அமெரிக்க சிறைகளில் வாடும் 2382 இந்தியர்கள் –ஆர் டி ஐ அதிர்ச்சி தகவல்

புதன், 14 நவம்பர் 2018 (12:27 IST)
இந்தியாவில் இருந்து அனுமதி இன்றி அமெரிக்காவில் குடியேறி உள்ளதாக ஒட்டுமொத்தமாக 2382 இந்தியர்கள் கைது செய்யப்பட்டு அமெரிக்க சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்ல விரும்புவோர் அதிகமாக செல்வது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கே. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே கூட இந்தியர்கள் இது போன்ற நாடுகளுக்குப் புலம்பெயர தொடங்கி விட்டனர்.

இதுபோல அமெரிக்கா செல்லும் இந்தியர்களில் பெரும்பகுதியினர் பஞ்சாபிகளே. படித்தவர்களுக்கும் பணக்காரர்களுக்கும் எளிதாகக் கிடைக்கும் அமெரிக்க விசா தொழில் முனைய விரும்புவோர்க்கும் கூலி வேலை செய்ய செல்வோர்க்கும் எளிதாக கிடைத்து விடுவதில்லை. இதனாலேயே பஞ்சாப்பின் சில இடங்களில் அமெரிக்காவுக்கு முறையின்றி குடியேறுவதற்கு சில ஏஜெண்ட்டுகள் செயல்பட்டு வருகின்றனர்.

இவர்கள் மூலம் முறையான விசாயின்றி அமெரிக்க செல்பவர்கள் அங்கு அமெரிக்க குடியேற்ற அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்டு சிறை செல்வது இப்போது அதிகமாகி வருகிறது. அதுவும் அமெரிக்காவின் அதிபராக ட்ரம்ப் பதவியேற்றபின் அமெரிக்காவின் குடியேற்ற விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. மேலும் முறையின்றி அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டினரை கைது செய்வதும் அதிகரித்து உள்ளது.

தற்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் இந்தியாவை சேர்ந்த 2382 பேர் அமெரிக்கா முழுவதும் உள்ள 80 க்கும் மேற்பட்ட சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்