மத்திய அரசின் அறிவிப்பால் ஜர்க்கான விநியோகஸ்தர்கள் – மாஸ்டர் ரிலீஸ் திட்டம் என்ன?

வியாழன், 7 ஜனவரி 2021 (10:01 IST)
மத்திய அரசு தமிழக உள்துறை செயலருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் 100 சதவீத இருக்கைகள் அனுமதி என்பது விதிமுறைகளை மீறிய செயல் என குறிப்பிட்டுள்ளது.

பொங்கலன்று மாஸ்டர் படத்தை தியேட்டரில் வெளியிடுவதாகப் படக்குழு தெரிவித்த நிலையில் நடிகர் விஜய் சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, தியேட்டர்களில் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கவேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார். மாஸ்டர் படத்துக்காக மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவைக் காப்பாற்றுவதற்காகவும் இதை செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தார்.  இதையேற்ற தமிழக அரசு சமீபத்தில் திரையரங்கில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்த சினிமா துறையினரும், ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆனால் அரசின் இந்த முடிவுக்கு மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து தமிழக தலைமைச் செயலருக்கு மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா எழுதியுள்ள கடிதத்தில், 50% இருக்கைகள் மட்டுமே தியேட்டர்களில் பயன்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தியேட்டர்களில் 100% அனுமதி என்பது மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை நீர்த்துபோகச்செய்யும் எனவும் ,மத்திய அரசிப் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு பின்பற்ற வேண்டுமெனக் கூறியுள்ளார்.

இதனால் இப்போது தமிழக அரசு அடுத்த கட்டமாக என்ன முடிவு எடுக்கும் என்ற குழப்பம் எழுந்துள்ளது. ஒருவேளை மீண்டும் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்றால் மாஸ்டர் படம் திட்டமிட்டப்படி ரிலீஸ் ஆகுமா இல்லை பின்வாங்குமா என்ற குழப்பம் எழுந்துள்ளது. மாஸ்டர் படத்தின் விநியோக உரிமையை பல கோடி ரூபாய் கொடுத்து விநியோகஸ்தர்கள் கைப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்