தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் "திருக்குறள் " படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

J.Durai

திங்கள், 15 ஏப்ரல் 2024 (07:54 IST)
ரமணா கம்யூனிகேஷன்ஸ் பட நிறுவனம் ஏற்கனவே கர்மவீரர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை “காமராஜ்” என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வெளியிட்டது. 
 
அந்த படம் தமிழக அரசின் சிறப்பு விருதினைப் பெற்றதோடு , காமராஜர் வரலாற்றுக்கான ஆவணமாகத் திகழ்கிறது. இது தவிர மகாத்மா காந்தியின் வாழ்க்கையை ஒட்டி எடுக்கப்பட்ட " வெல்கம் பேக் காந்தி " என்ற படத்தையும் தயாரித்திருந்தது அதுவும் மக்களிடையே வரவேற்பை பெற்றது.
 
டாக்டர் கோ. விசுவநாதன் வேந்தர் VIT தலைவர் தமிழியக்கம் வழங்க T.P.ராஜேந்திரனுடன் இணைந்து ரமணா கம்யூனிகேஷன்ஸ் தற்போது உலகின் ஆகச்சிறந்த அறநூலான திருக்குறளைத் திரைப்படமாகத் தயாரிக்கிறது.
 
தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.
 
அப்போது பேசிய படத்தின் இயக்குனர் A.J.பாலகிருஷ்ணன் ..
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து, வான் புகழ் கொண்ட தமிழ்நாடு என்ற பாரதியின் வாக்கு மிகையில்லை என்றாலும், ஜி.யு.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பின்புதான், தமிழின், தமிழ் பண்பாட்டின், தமிழரின் மேன்மையை மேற்கத்திய அறிவுலகம் அண்ணாந்து பார்த்தது.
 
தேசத்தந்தை மகாத்மாவும், திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரும் இன்று உலக அரங்கில், அறிஞர்கள் மத்தியில் இந்தியாவின் முகங்களாக அறியப்படுகின்றனர். பிரபல ரஷ்ய எழுத்தாளர் ‘டால்ஸ்டாய்’ ஒரு கடிதத்தில் குறிப்பிட்ட பின்புதான் காந்திஜிக்கு திருக்குறள் அறிமுகமாகிறது.
 
“மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை.
திறமான புலமையெனில் வெளி நாட்டோர் அதை வணங்கச் செய்தல் வேண்டும் என்ற பாரதியின் வரிகளை கட்டளையாக ஏற்றே திருக்குறளை திரைப்படமாக்கத் தீர்மானித்தோம்.
 
பைபிளிற்குப் பின் உலகில் அதிக மொழிகளில் பெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள். 
 
அச்சு ஊடகம் என்பது எழுத்தறிந்தோர்க்கு மட்டுமே. காட்சி ஊடகமோ எவ்வித தடையுமின்றி உலகின் அனைத்து மக்களையும் சென்றடையும் என்பதால் 
திருக்குறளைத் திரைப்படமாக்க இதுவும் ஒரு காரணம். 
 
இமாலயக் கருத்துகளை ஈரடியில் எளிதாகச் சொல்லிவிடுகிறது திருக்குறள். ஆனால் திருக்குறளின் உள்ளார்ந்த ஒளியை, அதன் உயிர்ப்பை மூன்று மணி நேர திரைப்படத்திற்குள் அடக்குவது அத்தனை எளிதல்ல என்பது திரைக்கதை எழுதும்போது உணர முடிந்தது.
 
அறத்தினை வலியுறுத்த தோன்றிய நீதி நெறிநூல் என்றாலும் குறள் வெறுமனே பிரசார இலக்கியமல்ல. கவித்துவமும், அழகியலும் மிக்க அற்புதப் படைப்பு. திரை மொழியிலும் இதை பிரதிபலிக்க முயற்சிக்கிறோம்.
 
திருவள்ளுவரோடு இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய தமிழ் நாட்டினையும் இத்திரைப்படத்தில் பதிவு செய்ய உள்ளோம். மூவரசோடு, வேணாடு, பூழிநாடு, பன்றிநாடு, அருவாநாடு, வள்ளுவநாடு என பல்வேறு சிற்றரசுகள் குறித்தும், தமிழ் அறிஞர்களுக்கிடையே நிகழ்ந்த வீரம் செறிந்த போர்க் களக்காட்சிகளும் இத்திரைப்படத்தில் இடம் பெறுகின்றன. அன்றைய தமிழர்களின் பண்பாடு, தொழில், வணிகம் என வாழ்வியல் குறித்தும் இத்திரைப்படம் பேசவிருக்கிறது.
 
அதோடு அன்றைய மெய்யியல், அறவியல், அரசியல், பொருளியல், சமூகவியல் என அத்தனை தரவுகளோடும், சங்க கால ஐந்து நில மாந்தர்களும் இத்திரைப்படத்தில் பாத்திரங்களாக இடம் பெறுகின்றனர்.
 
‘காமராஜ்’, முதல்வர் மகாத்மா, திரைப்படங்களைத் தயாரித்த எங்களுக்கு இப்பணி கிட்டியிருப்பது முன் வினைப்பயனே!
 
திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் இத்திரைப்படத்தினை சப்-டைட்டிலோடு உலகெங்கும் திரையிடத் திட்டமிட்டுள்ளோம் என்று பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்