முதலாளிகளுக்கே நிவாரணம் கொடுப்பதா? ரஜினி உதவியை ஏற்க மறுத்த தயாரிப்பாளர்கள்!

செவ்வாய், 5 மே 2020 (07:54 IST)
தயாரிப்பாளர்கள் என்பவர்கள் முதலாளிகள் என்றும், நடிகர்கள் அவர்களிடம் வேலை பார்ப்பவர்கள் என்றும் தயாரிப்பாளர் என்ற முதலாளிகளுக்கு நடிகர் என்ற வேலைக்காரர் நிவாரணம் அளிப்பதா? என்றும் தயாரிப்பாளர்களுக்கு ரஜினி செய்த உதவி குறித்து சில தயாரிப்பாளர்கள் கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
சமீபத்தில் நலிந்த தயாரிப்பாளர்கள் 750 பேருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரிசி உள்பட நிவாரணப் பொருட்களை வழங்கினார். தயாரிப்பாளர் கே.ராஜன் வேண்டுகோளுக்கு இணங்க ரஜினி கொடுத்த இந்த நிவாரணத்தை நலிந்த தயாரிப்பாளர்கள் பலர் பெற்று கொண்டனர்.
 
இந்த நிலையில் சுரேஷ் என்ற தயாரிப்பாளர் இதுகுறித்து கூறியபோது, ‘தமிழ் திரைஉலகின் முதலாளிகளான சினிமா தயாரிப்பாளர்களுக்கு , சம்பளம் வாங்கும் நடிகர் நிவாரணம் வழங்குவது கேவலம். அப்படியே நிவாரணம் கொடுக்க விரும்பினால் 50,000 ரூபாயோ அல்லது 1 லட்சம் ரூபாயோ தனித்தனியாக வழங்கினால் கவுரவமாக இருக்கும். என்று கூறியுள்ளார்.
 
இதேபோல் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே சுரேஷ் கூறியபோது, ‘நிவாரணம் வழங்கியது ரஜினியின் பெருந்தன்மை என்றாலும், தயாரிப்பாளர்கள் அரிசிக்கும் பருப்புக்கும் போய் நிற்ககூடாது. அது தன்மானத்துக்கு இழுக்கு என்று தெரிவித்து உள்ளார்.
 
மேலும் தயாரிப்பாளர் பாபு கணேஷ் இதுகுறித்து, ‘ரஜினி நலிந்த தயாரிப்பாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு பதிலாக ஒரு படம் நடித்துக் கொடுக்க குறைந்த சம்பளத்தில் கால்சீட் தரவேண்டும்’ என்று கூறியுள்ளார். ரஜினி என்ன செய்தாலும் எதிர்ப்பு தெரிவிக்க சிலர் இருப்பார்கள் என்ற வகையில் அவர் தயாரிப்பாளர்களுக்கு உதவியதையும் சிலர் அரசியல் ஆக்குவதாக தயாரிப்பாளர் சங்கத்தினர் தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்