டாக்டர்களுக்காக சிவகார்த்திகேயன் செய்த செயல்: குவியும் பாராட்டு

வியாழன், 23 ஏப்ரல் 2020 (18:12 IST)
கொரோனா வைரஸை எதிர்த்து போராடி வரும் டாக்டர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் டுவிட்டரில் ஒரு ஹேஷ்டேக் உருவாக்கி உள்ளார். அந்த ஹேஷ்டேக் மூலம் டாக்டருக்கு நன்றி தெரிவிக்க அவர் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
நாம் அனைவரும் சரியாக விதிகளை பின்பற்றினால் கொரோனாவை வென்றுவிடலாம். எனவே அனைவரும் வீட்டில் இருங்கள். அதுமட்டுமின்றி வீட்டில் இருக்கும் பெரியவர்கள் குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். நமக்காக வெளியே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் அனைவருக்கும் எனது நன்றி
 
இந்த நேரத்தில் இன்னொரு முக்கியமானவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். அவர்கள் தான் டாக்டர்கள். அவர்கள் தங்கள் உயிர், வாழ்க்கை, குடும்பம், எதையும் பார்க்காமல் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பணி செய்து கொண்டிருக்கும் மனித கடவுள் தான் டாக்டர்கள் என்றும், அவர்களுக்கு ஒரு பெரிய நன்றி என்றும் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
 
மேலும் டாக்டர்கள் மீது நமக்கு எப்பொழுதும் அன்பும் மரியாதையும் நிறைய உண்டு. எனவே அவர்களுக்காக #WeLoveDoctors என்ற ஹேஷ்டேக்கை பதிவு செய்திருப்பதாகவும், இதன்மூலம் அனைவரும் டாக்டர்களுக்கு நன்றி கூற வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 
சமீபத்தில் சில சம்பவங்கள் அவர்களை காயப்படுத்தி இருக்கும். நமக்கும் மிகவும் கஷ்டமாகத்தான் இருந்தது. இருப்பினும் அதுகுறித்து யோசிக்காமல் நமக்காக டாக்டர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்து கொண்டிருக்கின்றார்கள். டாக்டர்கள் நமக்காகத்தான் இருக்கின்றார்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்கள் 
 
இந்த முறை நாம் அவர்களுக்காக இருப்போம் என்பதை நிரூபிக்க வேண்டும். எனவே நீங்களும் உங்களுடைய அன்பையும் ஆதரவையும் டாக்டர்களுக்கும் தெரிவிக்க இந்த ஹேஷ்டேக் மூலம் அவர்களுக்கு நன்றி தெரிவித்து போஸ்ட் செய்யுங்கள். இந்த ஹேஷ்டேக் மூலமாக நமது அன்பும் மரியாதையும் அவர்களுக்கு போய் சேரட்டும். இந்த தருணத்தில் அவர்களுக்கு தேவை இந்த அன்பு ஒன்றுதான். நான் மிகவும் நம்புவது உலகின் தலைசிறந்த சொல் ’செயல்’. அந்த செயலை நாம் செய்து காட்டுவோம்’ என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்