''தொடர் தோல்வி..''தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு இந்தி நடிகர் வேண்டுகோள்

வெள்ளி, 9 ஜூன் 2023 (16:57 IST)
இந்திய சினிமாவில் ஒரு காலத்தில் பாலிவுட் சினிமாக்கள் ஹாலிவுட்டிற்கு அடுத்த இடத்தில் இருப்பதாக பெருமைப்பட்டுக் கொண்டிருந்தது. அதனால், ஒரு சில பாலிவுட் நடிகர், நடிகைகள் தென்னிந்திய மொழி சினிமாவில் நடிப்பதை தவிர்த்தனர்.

ஆனால், பாகுபலி, கேஜிஎஃப், விக்ரம், ஆர்.ஆர்.ஆர், பொன்னியில் செல்வன், லூசிபர் ஆகிய படங்களின்  வெற்றி இதை மாற்றிப் போட்டுவிட்டது. தமிழ் சினிமா, தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவை உலகளவில் கொண்டு சென்றுவிட்டது. வசூல் சாதனையும் படைத்து வருகிறது.

சில வருடங்களாக பாலிவுட் படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் நிலையில், சமீபத்தில் வெளியான சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் பதான் படம் சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்று வசூலில் சாதனை படைத்தது.

இந்த நிலையில், விரைவில் பிரபாஸ் நடிப்பில் ஆதிபுரூஸ் படம் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், தென்னிந்திய ரசிகர்களுக்கு  பாலிவுட் நடிகர் ஷாகீத் கபூர் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதில்,''தென்னிந்திய மக்கள் இந்தி திரைப்படங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். பாலிவுட் ரசிகர்கள் பெரிய மனம் படைத்தவர்கள். அவர்கள் எப்படி தமிழ்,மலையாளம், கன்னடம்,  உள்ளிட்ட மொழிப்படங்களை ரசிக்கிறார்களோ அதேபோல் தென்னிந்தியர்களுக்கும் இந்திப் படங்களை ரசிக்க வேண்டும். நாங்களும் நல்ல இந்திப் படங்கள் எடுத்து வருகிறோம்'' என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்