அஜித்தின் அறிக்கை இப்போது மட்டும் வருவது ஏன்? நெட்டிசன்கள் கேள்வி!

திங்கள், 21 ஜனவரி 2019 (20:18 IST)
கடந்த சில ஆண்டுகளாகவே அஜித் தனது படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வருவதும் இல்லை. அஜித்தை பற்றி மற்றவர்களின் பேட்டிதான் வருமே தவிர அவர் எந்தவொரு ஊடகத்திற்கும் பேட்டி கொடுப்பதும் இல்லை. அதேபோல் நடிகர் சங்கத்தின் கூட்டம் உள்பட எந்தவொரு நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்வதில்லை. அஜித்திற்கு நெருக்கமானவர்கள் கூட அவரை ஒரு மர்ம மனிதராகவே பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை அஜித் ரசிகர்கள் தங்கள் கட்சியில் சேர்ந்தது குறித்தும், அஜித் குறித்தும் அவர் தெரிவித்த கருத்துக்கள் ஊடகங்களின் தலைப்பு செய்தியாக மாறியது. அஜித் பாஜகவுக்கு ஆதரவு கொடுப்பார் என்ற ரீதியிலும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில் அனைத்து சந்தேகங்களுக்கும் விடை கிடைத்தூள்ளது. தனக்கு அரசியலில் விருப்பம் இல்லை என்றும், தனது ரசிகர்கள் தனது புகைப்படத்தை வைத்து அரசியல் செய்வதையும் தான் விரும்பவில்லை என்றும் தெளிவுற விளக்கியுள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் 'விஸ்வாசம்' திரைப்படம் வெளிவந்தபோது கட் அவுட் சரிந்து 6 பேர் பலத்த காயமடைந்து அதில் ஒருவர் மரணம் அடைந்தபோது வராத அறிக்கை, 'விஸ்வாசம் படம் பார்க்க பணம் தரவில்லை என்பதால் பெற்ற தந்தையையே பெட்ரோல் ஊற்றி அஜித் ரசிகர் ஒருவர் எறித்தபோது வராத அறிக்கை, தமிழிசை ஒருசில ரசிகர்களை கட்சியில் சேர்த்து 'தாமரையை அஜித் ரசிகர்கள் தான் மலர வைக்க வேண்டும் என்று கூறியவுடன் அவசர அவசரமாக அறிக்கை விட்டது ஏன்? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேபோல் தமிழ்நாடு இனி 'தலநாடு' என்று போஸ்டர் அடித்த ஒட்டிய அஜித் ரசிகர்களின் நிலை என்னவாக இருக்கும் என்பதும் சிந்திக்க வேண்டிய ஒன்று

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்