மகேந்திரனையும் பாலுமகேந்திராவையும் சேர்த்து வைத்தேன் – கமல் நெகிழ்ச்சி !

செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (16:08 IST)
இயக்குனர் மகேந்திரனுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

முள்ளும் மலரும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார் மகேந்திரன். அதன்  பின்னர் உதிரிப்பூக்கள், ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, கை கொடுக்கும் கை, பூட்டாத பூட்டுகள், நண்டு, கண்ணுக்கு மை எழுது, சாசனம் என மிகவும் குறைவான படங்களையே இயக்கினார். அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அட்லி இயக்கிய தெறி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் ரஜினியின் பேட்ட படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் சில நாட்களாக உடல்நலக் கோளாறால் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார் அவருக்கு வயது 79.

அவரின் உடலுக்கு திரையுலகை சேர்ந்தவர்களும் அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மதிமுக பொதுச்செயலாளர் மகேந்திரனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். மகேந்திரனின் நெருங்கிய நண்பரும் முள்ளும் மலரும் படம் வெளிவருவதற்கு பல உதவிகள் செய்தவருமான நடிகர் கமல்ஹாசன் மகேந்திரனுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
 

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘மகேந்திரனுடன் வெகுநாள் நட்பு எனக்குண்டு தங்கப்பதக்கம்’ காலத்திலிருந்தே அவரைத் தெரியும். 'முள்ளும் மலரும்' படத்தில் முதலில் நான் நடிப்பதாக இருந்தது. தமிழ்ப் படங்கள் மீது அதிருப்தியும் தமிழ்ப்படங்கள் எடுக்க ஆர்வமில்லாமல் இருந்த பாலு மகேந்திராவையும் இவரையும் என்னுடைய வீட்டில் சந்திக்க வைத்தது இன்னும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது. இரண்டு பேர் கையையும் சேர்த்துவைத்து வெற்றிப் படங்கள் எடுங்கள் என்று சொன்னேன். அதுபோலவே அவர்கள் செய்தார்கள்.

முள்ளும் மலரும் படத்திற்காக ஒரு மேனேஜர் மாதிரி எல்லா வேலைகளையும் நான் செய்தேன். ஏனென்றால் அது ஒரு அற்புதமானப் படம் என்று எனக்குத் தெரியும். மகேந்திரனின்  முடிவு, உச்சத்தைத் தொட்ட பிறகுதான் வந்திருக்கிறது என்பதில் சந்தோஷம். பல திறமைசாலிகள் திறமை வெளிவராமலேயே சென்றதைப் பார்த்திருக்கிறேன். ’ எனத் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்