முதல்வர் ஸ்டாலினுக்கு கே.பாக்யராஜ் எழுதிய வாழ்த்து கடிதம்!

சனி, 8 மே 2021 (16:50 IST)
தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள முக ஸ்டாலின் அவர்களுக்கு ஒட்டுமொத்த திரையுலகினர்களும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாக்யராஜ் அவர்களும் கடிதம் மூலம் தனது வாழ்த்தை தெரிவித்து உள்ளார். அவர் தனது வாழ்த்துக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:
 
உயர்திரு முக ஸ்டாலின் அவர்களுக்கும் மற்றும் தங்களுடன் பொறுப்பேற்கும் அனைத்து அமைச்சர் பெருமக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் பணிவன்பான வணக்கத்துடன் வாழ்த்துகளுடன் உங்கள் பாக்யராஜ் எழுதுவது. பொறுத்தார் பூமி ஆள்வார், ஆளும் பொறுப்பு தங்களை தேடி வர அப்பாவின் ஆசை கனிந்துள்ளது. அதைவிட தங்களது தன்னம்பிக்கையும் தளராத உழைப்புமே மிக மிக உன்னதமானது என மனம் நெகிழ்கிறது
தேர்தல் முடிவு வந்ததுமே சந்தித்து வாழ்த்த நினைத்தேன். ஆனால் எனக்கு இருந்த நோயின் அறிகுறி, சளி தொல்லை காரணமாக தங்களை அசெளகர்யப்படுத்த விரும்பாது தவிர்த்தேன். இப்போது அதிகாரபூர்வமாக தொற்று உறுதியானதால் காலதாமதமின்றி கடிதம் மூலமாக வாழ்த்துகிறேன்
 
தமிழ் சமுதாயத்தை சீரமைக்கவும் சிறப்பான சேவை பணியாற்றிய அப்பாவின் எழுத்தாணியுடன் அன்பு மகனாக தாங்கள் அனைத்து தமிழ் தாய்மார்களின் சுமை குறைத்து, கொரோனா நோயாளிகள் துயர் துடைக்கும் பொருட்டு நிறைவான பால் வார்த்து விட்டீர்கள், குறைவான விலையில். நெகழ்வாக இருந்தது. காவல்துறை நண்பர்கள் குறித்தும் கருணையுடன் பரிசீலித்து தருகிறீர்கள், மகிழ்வு
 
எனது குடும்பத்தார், பாக்யா குடும்பத்தினர் மற்றும் எழுத்தாளர்கள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களின் குடும்பம் சார்பாக வாழ்த்துகிறேன். நிறைவான ஆட்சி அரங்கேறி நாடு நலம் பெற அப்பாவின் அருளும் இருக்கும் என வாழ்த்துகிறேன்
 
இவ்வாறு கே பாக்யராஜ் தனது வாழ்த்து கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்