பங்குனி உத்திர நாளில் நடந்த சிறப்பு பொருந்திய நிகழ்வுகள் என்ன...?

பங்குனி மாதம் குருவின் அருள் நிறைந்த மாதம். குருவின் வீடான மீனம் ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம். அரசன் முதல் ஆண்டி வரை நாம் அனைவரும்  செய்யும் தவறுகளைத் திருத்திக் கொள்ளும் மாதமாக குரு பகவானின் ஆதிக்கம் நிறைந்த இந்த பங்குனி மாதம் விளங்குகிறது. 

நவகிரகங்களின் தலைவனான சூரியன், ஆசிரியராகிய குருவின் வீட்டில் அதாவது, மீனத்தில் சஞ்சரிக்கும் மாதம் இது. தெய்வங்களே உத்திரத்தை சிறந்த நட்சத்திரம்  என்று தேர்வு செய்த பெருமை உண்டு.
 
மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு. பன்னிரெண்டாவது மாதமான பங்குனியும்,  பன்னிரெண்டாவது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புண்ணிய திருநாள் பங்குனி உத்திரம். தெய்வத் திருமணங்கள் அதிகம் நடைபெற்ற மாதம் பங்குனி  என்கின்றன புராணங்கள். 
 
பங்குனி உத்திர நாளில் நிகழ்ந்தவை:
 
திருப்பரங்குன்றத்தில் முருகன் - தெய்வானை திருமணம் நடந்தது இந்த நாளில் தான். மகாலட்சுமி இந்நாளில் விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம்  பிடித்தாள். வள்ளி அவதாரம் செய்தது பங்குனி உத்திரத்தில்தான்.
 
பிரம்மன், தன் மனைவி சரஸ்வதியை நாக்கிலேயே வைத்துக் கொள்ளும்படியான வரத்தைப் பெற்றார். தன் மனைவி இந்திராணியை பிரிந்திருந்த இந்திரன், மீண்டும்  அவளுடன் சேர்ந்த நாள் இது.
 
சந்திர பகவான், கார்த்திகை, ரோகிணி உள்ளிட்ட 27 நட்சத்திரங்களை மனைவியராக அடைந்த புண்ணிய தினம். ராமபிரான் - சீதாதேவி, பரதன் - மாண்டவி, லட்சுமணன் - ஊர்மிளை, சத்ருக்னன் - ச்ருத கீர்த்தி ஆகியோருக்கு திருமணம் நடந்த தினம்.
 
இமவான் தன் மகள் பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தது இந்த நாளில் தான். மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடந்தது இந்த  நாளில் தான்.

ஆண்டாள் - ரங்கமன்னார் திருமணம் நடந்தது இந்த நாளில் தான். இந்த நாளில் தான் இடும்பன் மூலம் காவடி தூக்கும் பழக்கம் ஆரம்பித்தது. பங்குனி உத்திரத்தில்தான் தர்மசாஸ்தாவான சபரிமலை ஐயப்பன் பிறந்தார். அர்ச்சுனன் பிறந்தது பங்குனி உத்திரத்தில்தான். சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மணக்கோலத்தில் பரமன் காட்சி தந்தது இந்த நாளில்தான். சாஸ்தா அவதரித்தது பங்குனி உத்திர திருநாளில்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்