யோகம் தரும் குருப்பெயர்ச்சி 2024 சிறப்பு பலன்கள்! – மேஷம்!

Prasanth Karthick

சனி, 27 ஏப்ரல் 2024 (08:08 IST)
மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும், மரியாதை கொடுக்கும் மேஷ இராசி வாசகர்களே! நீங்கள் எதிலும் அறிவார்ந்து செயல்படுபவர். வெளிவட்டாரப் பழக்கங்களை விரும்பும் தாங்கள் ஒரு சிறந்த பண்பாளர். வார்த்தைகளில் நிதானம் மிக்கவர். தேவை இல்லாத இடங்களில் கருத்து கூற மாட்டீர்கள். யாரும் கேட்டால் மட்டுமே உதவி செய்வீர்கள். அதிலும் உடல் ஊனமுற்றோருக்கு அள்ளி வழங்குவீர்கள்.


 
இந்த குருப் பெயர்ச்சியில் முயற்சிகள் பல செய்து நல்ல செயல்களைச் செய்து சிறப்படைவீர்கள். குடும்பத்திலும் சிறு சலசலப்புகள் ஏற்படும். வெளியில் கொடுத்திருந்த பணம் கைக்கு திரும்பி வரத் தாமதமாகும். இதனால் அத்தியாவசியத் தேவைகளுக்கு சிறிது கடன் வாங்க நேரிடலாம்.

சகோதர, சகோதரி வகையிலும் கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களும் உங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்த நினைப்பார்கள். மற்றபடி மனதில் ஊக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு செயல்படுவீர்கள்.

கடினமாக முயற்சி செய்து உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். குடும்பத்திலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. யாரையும் புண்படுத்தாமல் உங்கள் அணுகுமுறையால் வெற்றி பெறுவீர்கள்.

குடும்பத்தில் பாகப்பிரிவினை சுமுகமாக நடக்கும். அசையாச் சொத்துக்களிலிருந்து வருமானம் வரத் தொடங்கும். பல விஷயங்களை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். வழக்கு விவகாரங்களில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். குறைந்த உழைப்பிலும் அதிக ஆதாயம் கிடைக்கும். அதேசமயம் புறம் பேசுபவர்களை இனம் கண்டு ஒதுக்கவும். குடும்பத்தில் ஏற்படும் சில அனாவசியப் பிரச்னைகளைக் கண்டும் காணாமல் இருக்கவும்.

செய்தொழிலில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். நவீன பொருட்களை வாங்கி இல்லத்தை அலங்கரிப்பீர்கள். முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுக்கும் உதவி செய்து பெருமையடைவீர்கள். மற்றபடி அலைச்சல் தரும் வேலைகளைக் குறைத்துக்கொள்ளவும். அனாவசியப் பயணங்களையும் தவிர்க்கவும்.

உத்யோகஸ்தர்களுக்கு அலைச்சலும் வேலைப்பளுவும் அதிகரித்தாலும் உங்கள் வேலைகள் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறும். உங்களின் ஆற்றல் அதிகரிக்கும். அலுவலக ரீதியான பயணங்களால் பண வரவு உண்டாகும். அதேநேரம் சக ஊழியர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க வேண்டாம். சிலருக்கு இந்த குருப் பெயர்ச்சியில் விரும்பத்தகாத இடமாற்றங்கள் உண்டாகும்.

வியாபாரிகள் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் அனுகூலமான பலன்களைக் காண்பீர்கள். தொழில் ரீதியாக புதிய திருப்பங்கள் ஏற்படும். புதிய சந்தைகளை நாடிச் செல்லும்போது அதீத கவனத்துடன் செயல்பட்டு காரியமாற்றவும். கூட்டுத்தொழில் புரிவோர் சற்று உஷாராக இருப்பது நல்லது. சந்தையில் போட்டிக்குத் தகுந்தவாறு விலையை நிர்ணயம் செய்து விற்றால் நல்ல வருமானத்தைப் பெற முடியும்.

அரசியல்வாதிகள் இந்த குருப் பெயர்ச்சியில் பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். கட்சி மேலிடத்தின் பாராட்டைப் பெறுவீர்கள். இதனால் உங்களுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். எதிரிகளும் உங்களிடம் அடங்கியே நடப்பார்கள்.

கலைத்துறையினரைத் தேடிப் புதிய  ஒப்பந்தங்கள் வரும்.ஆனாலும் ரசிகர்களின் ஆதரவு குறைந்தே காணப்படும். எனவே ரசிகர் மன்றங்களுக்கு செலவு செய்து அவர்களை உற்சாகப்படுத்தவும். தொழிலில் கவனமும், செயல்பாட்டில் நிதானமும் தேவை.

பெண்மணிகளுக்கு குழந்தைகளால் பெருமை உண்டாகும். அதேசமயம் கணவருடன் வாக்கு வாதங்கள் ஏற்படலாம். அதனால் பொறுப்புடனும், நிதானத்துடனும் நடந்துகொள்ளவும். மற்றபடி பொருளாதார நிலையில் எந்தக் குறைவும் ஏற்படாது. எனவே ஆடை , அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மாணவமணிகள் படிப்பில் கவனத்துடன் ஈடுபடவும். சிலர் முதல் தரம் வாங்குவார்கள். விளையாட்டிலும் வெற்றி பெறுவார்கள்.

 


அஸ்வினி:
இந்த குருப் பெயர்ச்சியில் காரியத்தடைகள் நீங்கி அனுகூலம் பிறக்கும். மதிப்பு மரியாதை சுமாராகவே இருக்கும். வீண் விவாதங்களைத்  தவிர்க்கவும். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும்.

பரணி:
இந்த குருப் பெயர்ச்சியில் புதிய வீடு வாங்க வாய்ப்பு உண்டு. குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே  அன்பு நீடிக்கும் என்றாலும் ஏழாம் இடத்தில் இருக்கும் ராகுவால் சிற்சில பிரச்சனைகள் வரத்தான் செய்யும். எனவே ஒருவருக்கொருவர் விட்டுக்  கொடுத்துப் போகவும்.

கார்த்திகை:
இந்த குருப் பெயர்ச்சியில் உறவினர் வகையில் அதிக நெருக்கம் வேண்டாம். சிலர் தொழில் நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிய  நேரிடலாம். தூரத்தில் இருக்கும் உறவினரால் நன்மை ஏற்படும்.

 
பரிகாரம்: செவ்வாய்கிழமைதோறூம் அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று வரவும். முடிந்தவர்கள் அருகிலிருக்கும் அறுபடை ஸ்தலங்களுக்குச் சென்று வாருங்கள்.  ’கந்த ஷஷ்டி கவசம்’ அன்றாடம் பாராயணம் செய்வது. “ஓம் சரவணபவ” என்ற மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லுங்கள். உங்கள் பிரார்த்தனைகள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தெற்கு
அதிர்ஷ்ட கல்: புஷ்பராகம், பவழம்
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: ஸ்ரீமுருகன், ஸ்ரீகுரு

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்