சகல நன்மைகளையும் பெற்று தரும் வில்வ இலை அர்ச்சனை...!!

வில்வம் சிவபெருமானின் தலவிருட்சம் ஆகும். இவ்விருட்சத்தைப் பூஜிப்பவர்கள் சகல நன்மைகளும் பெறுவார்கள். வில்வ இலைகள் சிவனின் திரிசூல வடிவத்தையும் இறைவனின் முக்குணங்களையும் குறிப்பதாக விளங்குகின்றன. 

வில்வத்தில் மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம், என பல வகைகள் உள்ளன. அதிலும் குறிப்பாக, மூன்று இதழ் கொண்ட வில்வ  இதழ்களையே பூஜைக்குப் பயன்படுத்துகிறோம். இவையல்லாமல் ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ மரங்களும் உள்ளன. 
 
பூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியோதயத்துக்கு முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்ள வேண்டும். சிறிது தண்ணீரை வில்வத்தில் தெளித்துவிட்டு,  பூஜைக்குப் பயன்படுத்த வேண்டும். தினமும் சிவனுக்கு வில்வம் சார்த்தி அர்சனை செய்து வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

மகா சிவராத்திரி நாளில்,  வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வம் சார்த்தி சிவனை பூஜித்தால், நம்முடைய ஏழேழு ஜென்மத்துப் பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்.
 
சிவனுக்கு அர்ச்சனை செய்வதற்கு தேவையான வில்வத்தை மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, ஆகிய நாட்களில்  பறிக்கக் கூடாது. மேலும் இந்நாட்களில் பூஜைக்குத் தேவையானதை முதல் நாளே பறித்து வைத்து கொள்ளவேண்டும். 
 
வில்வத்தைப் பறித்து ஆறுமாதம் வரை வைத்துப் வைத்திருந்து பூஜை செய்யலாம். உலர்ந்த வில்வம் மற்றும் பூஜித்த வில்வம் முதலியவற்றாலும் பூஜை செய்யலாம். சிவ அர்ச்சனையில் வில்வ அர்ச்சனை கோடி புண்ணியம் தரவல்லது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்