15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..! வெப்ப அலை வீசும்.! வானிலை மையம் எச்சரிக்கை..!

Senthil Velan

புதன், 24 ஏப்ரல் 2024 (13:53 IST)
தமிழகத்தில் நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் 15 மாவட்டங்களில் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பகல் நேரங்களில் வெளியே வருவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது இந்நிலையில்,  தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
அதன்படி ஈரோடு, சேலம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
இதனிடையே தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.
 
24.04.2024: தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் லேசான மழை  பெய்யக்கூடும்.  ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
 
25.04.2024: தென் தமிழகத்தில்  ஓரிரு  இடங்களில் லேசான மழை  பெய்யக்கூடும்.  வட தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

26.04.2024 முதல் 30.04.2024 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
 
அடுத்த 5 தினங்களுக்கான முன்னறிவிப்பு: 
 
24.04.2024 மற்றும் 25.04.2024:
 
அதிகபட்ச   வெப்பநிலை  வட தமிழக  உள்  மாவட்டங்களின்  ஒருசில  இடங்களில்  இயல்பை விட 3° – 5° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். 
 
அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 39°–42° செல்சியஸ். இதர  தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகள்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35°–38° செல்சியஸ் இருக்கக்கூடும்.
 
26.04.2024 முதல் 28.04.2024 வரை:
 
அதிகபட்ச   வெப்பநிலை  தமிழக  உள்  மாவட்டங்களின்  ஒருசில  இடங்களில்  இயல்பை விட 2° – 4° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். 
 
அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 38°–41° செல்சியஸ், இதர  தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகள்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35°–38° செல்சியஸ் இருக்கக்கூடும்.
 
ஈரப்பதம்: 
 
24.04.2024 முதல் 28.04.2024 வரை:
காற்றின் ஈரப்பதம் தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில்  பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-85% ஆகவும்  இருக்கக்கூடும். 
 
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது  ஓரிரு இடங்களில்  அசௌகரியம் ஏற்படலாம்.
 
வெப்ப அலை பற்றிய முன்னெச்சரிக்கை: 
 
24.04.2024 & 25.04.2024: வட  தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
 
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான முன்னறிவிப்பு:
 
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்