சாராய விற்பனையை தடுத்த மக்கள்; சுக்குநூறான கிராமம்!

வியாழன், 25 ஜூன் 2020 (11:09 IST)
வேலூர் அருகே சாராயம் விற்பதை தடுத்த கிராமத்தினரை மற்றொரு கிராமத்தினர் தாக்கி கிராமத்தையே அழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அருகே உள்ள மேற்கு கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். விவசாயியான இவரது வீட்டுக்கு அருகே வெல்லைக்கல் மலை, நச்சிமேடு மலை ஆகிய மலை கிராமங்களுக்கு செல்வதற்கான மண் பாதை அமைந்துள்ளது. அந்த மலை கிராமங்களை சேர்ந்தவர்கள் சாராயம் காய்ச்சி விற்று வருவதால் கொல்லைமேடு கிராமத்தினருக்கும், மலை கிராமத்தினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் மண் பாதை வழியாக மலை கிராமங்களுக்கு வெளியூர் ஆட்கள் சாரயம் குடிக்க சென்று வந்ததால் அதை தடுக்கும் வகையில் மண்பாதையில் தடுப்பு வேலி அமைத்துள்ளார் தங்கராஜ். இதனால் கோபமடைந்த மலை கிராமத்தினர் சிலர் நாட்டு துப்பாக்கிகள்,  அரிவாள்கள் சகிதம் கொல்லைமேடு கிராமத்திற்கு வந்து தங்கராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். மட்டுமல்லாமல் கிராமத்தில் உள்ள வீடுகளையும் அடித்து நொறுக்கி விட்டு சென்றுள்ளனர். வெட்டுப்பட்ட தங்கராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மலை கிராமத்தினரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் வேலூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்