போதும் உங்க பொதுமுடக்கம்: அரசிடம் நல்லதை வேண்டும் வைகோ!

செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (15:16 IST)
தமிழ்நாட்டுக்கு உள்ளே போக்குவரத்து முடக்கத்தை நீக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளார் வைகோ. 
 
கொரோனா தொற்று அச்சம்‌ காரணமாக, கடந்த 5 மாதங்களாக பொது முடக்கம்‌ நடைமுறையில்‌ இருக்கின்றது. வருமானத்திற்கு வழியின்றி பட்டினி கிடக்க நேர்ந்தபோதிலும்‌, அரசுக்‌ கட்டுப்பாடுகளை பொதுமக்கள்‌ கடைப்பிடித்து வருகின்றனர்‌.
 
கடந்த ஐந்து மாதங்களில்‌ அரசு வெறும்‌ ஆயிரம்‌ ரூபாய்‌ மட்டுமே உதவித்தொகையாக அளித்தது. நியாயவிலைக்‌ கடைகளில்‌ உணவுப்‌ பொருட்கள்‌ வழங்கியது. ஆனால்‌, அவை போதுமானது இல்லை.
 
அதேவேளையில்‌, டாஸ்மாக்‌ கடைகளைத்‌ திறந்து விட்டது. அதனால்‌ ஏழை எளிய அடித்தட்டுப்‌ பொதுமக்கள்‌ குடும்பங்களின்‌ அமைதி பறிபோய்விட்டது. சட்டம்‌ ஒழுங்கு பிரச்சினைகள்‌ பெருகி வருகின்றன.
 
மாவட்டங்களுக்கு இடையில்‌ போக்குவரத்தை நிறுத்தி, இபாஸ்‌ வாங்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது. ஆனால்‌ கடந்த ஐந்து மாதங்களில்‌ இ-பாஸ்‌ கேட்டு விண்ணப்பித்த 47 லட்சம்‌ பேருக்கு வழங்கவில்லை. இதனால்‌ பொதுமக்கள்‌ அடைந்த துன்பத்திற்கு அளவே இல்லை.
 
கர்நாடக அரசு அனைத்துத்‌ தடைகளையும்‌ விலக்கிக்‌ கொண்டு விட்டது. நடுவண்‌ அரசு கேட்டுக்‌ கொண்டபடி புதுச்சேரி மாநில அரசு தனது எல்லைகளைத்‌ திறந்து விட்டது. தமிழ்நாட்டை விட மிகக்‌ கடுமையாக பாதிக்கப்பட்ட தில்லியில்‌, ஒரு மாதத்திற்கு முன்பே அனைத்துத்‌ தடைகளும்‌ விலக்கப்பட்டு விட்டன. இப்போது அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பி விட்டது.
 
எனவே, அனைத்துத்‌ தரப்பு மக்களின்‌ நலன்‌ கருதி, தமிழக அரசு, தமிழ்நாட்டுக்கு உள்ளே போக்குவரத்து முடக்கத்தை நீக்க வேண்டும்‌. அரசுப்‌ பேருந்துகளை கட்டுப்பாடுகளுடன்‌ இயக்க வேண்டும்‌ என கேட்டுக்கொண்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்