திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம்! பக்தர்கள் வசதிக்காக 1084 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Prasanth Karthick

வியாழன், 22 பிப்ரவரி 2024 (09:04 IST)
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் பௌர்ணமி கிரிவலத்திற்காக ஏராளமான பக்தர்கள் தயாராகி வருவதால் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.



பஞ்சபூத ஸ்தலங்களில் அக்கினி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் கிரிவலம் உலக பிரசித்தி பெற்றது. மாதம்தோறும் பௌர்ணமியில் நடைபெறும் கிரிவலம் இந்த மாதத்தில் எதிர்வரும் 24ம் தேதி சனிக்கிழமை பௌர்ணமி நாளில் நடைபெறுகிறது. வார இறுதி நாள் என்பதால் பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என கணக்கிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கூடுதல் சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்துள்ளது.

அதன்படி, நாளை 23ம் தேதி தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து 682 பேருந்துகளும், நாளை மறுநாள் 24ம் தேதி 502 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

23ம் தேதி (நாளை) திருவண்ணாமலைக்கு கிளாம்பாக்கத்தில் இருந்து 275 பேருந்துகள், காஞ்சிபுரத்தில் இருந்து 40 பேருந்துகள், புதுச்சேரியில் இருந்து 30 பேருந்துகள், பெங்களூரிலிருந்து 20 பேருந்துகள், வேலூரிலிருந்து 55 பேருந்துகள், திருச்சி, சேலம், ஓசூரிலிருந்து தலா 50 பேருந்துகள், கிருஷ்ணகிரியிலிருந்து 20 பேருந்துகள், தருமபுரியிலிருந்து 30 பேருந்துகள் மற்றும் இதர வழித்தடங்களில் 62 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அதுபோல 24ம் தேதி ( நாளை மறுநாள்) திருவண்ணாமலைக்கு கிளாம்பாக்கத்தில் இருந்து 125 பேருந்துகள், காஞ்சிபுரத்தில் இருந்து 20 பேருந்துகள், புதுச்சேரியில் இருந்து 20 பேருந்துகள், பெங்களூரிலிருந்து 20 பேருந்துகள், வேலூரிலிருந்து 55 பேருந்துகள், திருச்சி, சேலம், ஓசூரிலிருந்து தலா 50 பேருந்துகள், கிருஷ்ணகிரியிலிருந்து 20 பேருந்துகள், தருமபுரியிலிருந்து 30 பேருந்துகள் மற்றும் இதர வழித்தடங்களில் 62 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மேலும் மாவட்ட வாரியாக பயணிகளின் கூட்டத்தை கணக்கில் கொண்டு மேற்கொண்டு பேருந்துகள் தேவைப்பட்டாலும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்