திருச்சியை பறிகொடுத்த திருநாவுக்கரசர்.. முதல்வர் எடுத்த ரகசிய சர்வே காரணமா?

Siva

செவ்வாய், 19 மார்ச் 2024 (08:54 IST)
கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட திட்டமிட்டிருந்த நிலையில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு அந்த தொகுதி அளிக்கப்பட்டது என்பதும் துரை வைகோ அந்த தொகுதி வேட்பாளர் என அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் திருச்சி தொகுதியை பறிகொடுத்த திருநாவுக்கரசர் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் காங்கிரஸ் மேலிடம் மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் சேர்ந்து தனக்கு துரோகம் செய்துவிட்டதாகவும் தனக்கு நெருக்கமான வட்டாரங்களில் கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் திருச்சி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்க கூடாது என்றும் குறிப்பாக திருநாவுக்கரசருக்கு கொடுக்க கூடாது என்றும் முதல்வர் ஸ்டாலினுக்கு வந்த ரகசிய சர்வே கூறி இருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் குறித்து ரகசிய சர்வே எடுத்த திமுக, திருச்சி தொகுதியை இம்முறை காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்தால் கண்டிப்பாக தோல்வி என்றும் வாக்களித்த மக்களுக்கு எந்த திட்டத்தையும் திருநாவுக்கரசர் செய்யவில்லை என்றும் குறிப்பாக கொரோனா வைரஸ் காலத்தில் அவர் தொகுதி பக்கம் எட்டியே பார்க்கவில்லை என்ற அதிருப்தி ஏற்பட்டு இருப்பதாகவும் சர்வேயில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதனால் தான் திருச்சி தொகுதியை மதிமுகவுக்கு கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த முறை திருநாவுக்கரசருக்கு போட்டியிட வாய்ப்பே கிடைக்காது என்றும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்