இப்ப என்னதான் சொல்ல வறீங்க.. தெளிவா சொல்லுங்க! – ரஜினிக்கு திருமா கேள்வி!

திங்கள், 11 மே 2020 (12:36 IST)
மதுக்கடைகளை திறப்பதற்கு தமிழக அரசு மேல்முறையீடு செய்திருப்பதற்கு ரஜினிகாந்த் கூறியுள்ள கருத்து இரட்டை மனநிலையோடு இருப்பதாக திருமாவளவன் கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கடந்த 7ம் தேதி தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட சில இடங்களை தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் ஊரடங்கு விதிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை என இதுகுறித்து புகார்கள் அளிக்கப்பட்டதால் மதுக்கடைகளை மூடும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு மேல்முறையீடு செய்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. மீண்டும் தமிழகம் மேல்முறையீடு செய்திருப்பதற்கு அரசியல் கட்சிகள் பல எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் தமிழக அரசின் இந்த முடிவு குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் “இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள் “ என்று கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் இந்த கருத்து குறித்து பேசியுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் “தமிழக அரசு குறித்து ரஜினிகாந்த் பேசியுள்ளது “பாம்பும் சாகாமல், கம்பும் நோகாமல்” என்பது போல உள்ளது. அவர் அதிமுக அரசை கண்டிக்க விரும்புகிறாரா அல்லது நட்பு பாராட்டுகிறாரா என்பது சந்தேகமாக உள்ளது. மதுக்கடைகளை மூடவேண்டும் என உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன் என அவரால் வெளிப்படையாக கருத்து சொல்ல முடியவில்லை” என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்