ஊருக்கு போகக் கூட காசு இல்ல.. கதறி அழுத பயணிகள்! – பணத்தை திரும்ப கொடுத்த பறக்கும் படை!

Prasanth Karthick

செவ்வாய், 26 மார்ச் 2024 (08:54 IST)
தேர்தல் பறக்கும் படையால் பணம் பறிமுதல் செய்யப்பட்டதால் சுற்றுலா பயணி கதறி அழுத வீடியோ வைரலான நிலையில் பயணிகளிடம் அவர்களது பணம் திரும்ப அளிக்கப்பட்டுள்ளது.



தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு பகுதிகளிலும் வாகன சோதனைகளில் ஈடுபட்டு உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊட்டியில் பஞ்சாப் தம்பதியர் சுற்றுலா சென்றிருந்த நிலையில் அவர்கள் வாகனத்தை சோதனையிட்டதில் ரூ.69,400 பணம் கைப்பற்றப்பட்டது. அப்போது தாங்கள் சுற்றுலா செலவுக்காக வைத்திருந்த பணம் அது என்றும், அதை பறிமுதல் செய்துவிட்டதால் திரும்ப செல்லக் கூட செலவுக்கு பணம் இல்லை என்றும் அந்த பெண்மணி கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் நேற்று அவர்களது ஆவணங்களை சரிபார்த்து அவர்களிடம் கைப்பற்றிய தொகையை தேர்தல் அதிகாரிகள் திரும்ப ஒப்படைத்துள்ளனர். தேர்தல் சமயத்தில் கைப்பற்றப்படும் தொகை பின்னர் அதன் உரிமையாளர்கள் உரிய ஆவணங்களை கொடுத்து திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்றும், இதுகுறித்து மக்கள் பதட்டமடைய வேண்டாம் என்றும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்