மத்திய அரசு ஓரவஞ்சனை..! தமிழக மக்கள் வரி கொடுப்பதில்லையா..? ஜெயக்குமார் கேள்வி...

Senthil Velan

சனி, 27 ஏப்ரல் 2024 (12:11 IST)
2015-ல் இருந்து கணக்கெடுத்து பார்த்தால், மத்திய அரசிடம் நாம் ஒன்றரை லட்சம் கோடி கேட்டிருக்கிறோம் என்றும் ஆனால் இதுவரை 7 ஆயிரம் கோடி தான் மத்திய அரசு கொடுத்து இருக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
 
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒக்கி புயல், வர்தா புயல், மிக்ஜாம் புயல் என பல்வேறு புயல்கள் சென்னை மற்றும் தமிழகத்தை தாக்கியிருக்கிறது என்றார். 2015-ல் இருந்து கணக்கெடுத்து பார்த்தால், மத்திய அரசிடம் நாம் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் கேட்டிருக்கிறோம். ஆனால் இதுவரை 7 ஆயிரம் கோடி ரூபாய் தான் மத்திய அரசு கொடுத்து இருக்கிறது என்று ஜெயக்குமார் குற்றச்சாட்டினர். 
 
மத்தியில் ஆளுகின்ற தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக என யாராக இருந்தாலும் இதைத்தான் செய்கிறார்கள் என்றும் யானை பசிக்கு சோளப் பொறி என்பது போல் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு நிதி அளிக்கிறது என்றும் அவர் விமர்சித்தார்.
 
வடமாநிலங்களில் இது போன்ற சம்பவம் நிகழ்ந்தால் அவர்களுக்கு நிதியை வாரி வழங்குகிறார்கள் என தெரிவித்த ஜெயக்குமார், தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்றும் தமிழக மக்கள் வரி கொடுப்பதில்லையா? என்ற கேள்வி எழுப்பினார்.  வடக்குக்கு ஒரு நீதி தெற்குக்கு ஒரு நீதி என இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தேசிய கட்சிகளால் ஒரு பிரயோஜனமும் கிடையாது என்றும் ஜெயக்குமார் கடுமையாக சாடினார்.
 
பல ஆண்டுகள் மத்தியில் கூட்டணியில் இருந்த திமுக அரசு ஒரு அரசியலமைப்பு சட்டத்தை திருத்தி அதன் அடிப்படையில் ஒரு நிதி பகிர்வு சீரான வகையில் இருக்கும் ஒரு சட்டத்தை கொண்டு வந்திருந்தால் அந்தப் பங்கு சரியாக தமிழகத்துக்கு கிடைத்திருக்கும் என்று அவர் தெரிவித்தார். 

ALSO READ: அதிமுக ஆட்சியிலும் மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை..! இபிஎஸ் குற்றச்சாட்டு..!!
 
மாநில உரிமைகளை காப்போம், தமிழ்நாட்டு மக்களை காப்போம் என மு.க ஸ்டாலின் கோஷமிட்டு வருகிறார் என்றும் தமிழகத்தை காப்பாற்ற முடியாத ஸ்டாலின், வட மாநிலங்களில் பிரச்சாரம் செய்ய போகிறாராம், இதைக் கேட்கும் போது கேலிக்கூத்தாக இருக்கிறது என்றும் ஜெயக்குமார் விமர்சித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்