அரசுடன் ஆசிரியர்கள் பேச்சுவார்த்தை தோல்வி: டிபிஐ வளாகத்தில் நாளை போராட்டம்!

வியாழன், 12 அக்டோபர் 2023 (09:36 IST)
சென்னை: பள்ளிக்கல்வித் துறையுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் டிபிஐ வளாகத்தில் திட்டமிட்டபடி நாளை (அக்.13) போராட்டம் நடைபெறும் என்று டிட்டோஜாக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


 
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிடல், எமிஸ் பதிவேற்றம் பணிகளில் இருந்து விடுவித்தல் என்பன உட்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோ ஜாக்) சார்பில் சென்னையில் நாளை (அக்.13) போராட்டம் நடத்தப்பட உள்ளது.

இதையடுத்து டிட்டோஜாக் குழுவில் உள்ள ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன், பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் க.அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் ஆகியோர் சென்னை டிபிஐ வளாகத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் செ.முத்துசாமி, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் மயில், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் தாஸ், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கப் பொதுச்செயலாளர் ஜான் வெஸ்லி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுமார் 2 மணி நேரம் வரை நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் திட்டமிட்டபடி போராட்டத்தை நடத்தவுள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து டிட்டோஜாக் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் வின்சென்ட் பால்ராஜ், சேகர் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “நாங்கள் முன்வைத்த 30-ல் 9 கோரிக்கைகளை நிறைவேற்ற கல்வித்துறை அதிகாரிகள் முன்வந்தனர். ஆனால், அதற்கு எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் வழங்க வலியுறுத்தியுள்ளோம். அதையேற்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அறிக்கை வெளியிட வேண்டும். இல்லையெனில் திட்டமிட்டபடி டிபிஐ வளாகத்தில் நாளை போராட்டம் நடத்தப்படும். மேலும், எமிஸ் தளத்தில் வருகைப்பதிவு தவிர்த்து இதர அலுவல் பணிகளை அக்.16-ம் தேதி முதல் ஆசிரியர்கள் மேற்கொள்ளமாட்டார்கள்” என்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்