செந்தில் பாலாஜிக்கு பின்னடைவு..! ED வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு..!

Senthil Velan

புதன், 13 மார்ச் 2024 (12:31 IST)
அமலாக்க துறை வழக்கு ஆரம்ப நிலையில் உள்ளதால் எந்த நிவாரணமும் வழங்க முடியாது எனக்கூறி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான அமலாக்கத் துறை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 
 
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் சென்னை எம்.பி. - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன.
 
இந்த குற்றம் மூலம் ஈட்டிய பணத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத் துறையினர், செந்தில் பாலாஜிக்கு எதிராக  சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்குப்பதிவு செய்தனர்.
 
இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட  செந்தில் பாலாஜி, தனக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணை முடியும் வரை, சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். 
 
இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை (பிப்ரவரி  15) எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த மறு ஆய்வு மனு, நீதிபதிகள் எம்.எஸ் ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹத்கி மற்றும் எஸ்.பிரபாகரன் ஆஜராகி வாதிட்டனர்.
 
அப்போது, மோசடி வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யும் முன் அமலாக்க துறை வழக்கு விசாரணையை துவங்க முடியாது என்றும் அமலாக்க துறை வழக்கை விசாரணைக்கு அனுமதிக்கும் பட்சத்தில் மோசடி வழக்கில் விடுவிக்கப்பட்டால் பாதிப்பு ஏற்படும்  என்றும் தெரிவிக்கப்பட்டது. 

ALSO READ: தேமுதிகவிற்கு அதிமுக அழைப்பு..! விரைவில் 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தை..!!
 
இதனையடுத்து, அமலாக்க துறை வழக்கு ஆரம்ப நிலையில் உள்ளதால் எந்த நிவாரணமும் வழங்க முடியாது எனக்கூறி அமலாக்கத் துறை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க மறுத்தனர். செந்தில் பாலாஜி மனுவுக்கு ஏப்ரல் 25க்குள் பதிலளிக்கும்படி அமலாக்க துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்