அக்கா இருந்திருந்தா மெரினாவில் இடம் கொடுத்திருப்பார் - எடப்பாடியை விளாசிய சசிகலா

திங்கள், 20 ஆகஸ்ட் 2018 (10:12 IST)
திமுக கருணாநிதியின் மறைவு குறித்து சிறையில் உள்ள சசிகலா டிடிவி தினகரன் தரப்பிடம் பகிர்ந்த சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

 
கடந்த வெள்ளிக்கிழமை சசிகலாவின் பிறந்த நாள். எனவே, அவருக்கு வாழ்த்து கூற டிடிவி தினகரன், அவரின் மனைவி அனுராதா, தினகரனின் மகள்,  நடராஜனின் சகோதரர், சசிகலாவின் உதவியாளர் கார்த்திக் மற்றும் வழக்கறிஞர்கள் அன்று காலை பெங்களூர் அக்ரஹார சிறைக்கு சென்றுள்ளனர்.
 
கணவர் இறந்து ஒரு வருடம் முடியவில்லை என்பதால் கேக் வெட்ட வேண்டாம் என சசிகலா முன்பே கூறியிருந்ததால், சிறையில் இருந்த அத்தனை கைதிகளுக்கும் இனிப்பு மட்டும் வாங்கி சென்றார்களாம். அதோடு, அன்று எல்லோருக்கும் ஸ்பெஷல் மதிய உணவும் செய்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டதாம். 

 
அதோடு, சசிகலா பெயரில் தமிழகத்தில் உள்ள சில கோவில்களில் சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டது. அனைவரையும் சந்தித்த சசிகலா கருணாநிதியின் மறைவு குறித்து பேசியிருக்கிறார். “கருணாநிதி இறந்து விட்டார் என்ற செய்தியை நம்ப முடியவில்லை. அந்த செய்தி கேட்டு என்னால் அன்று சாப்பிட முடியவில்லை. வழக்கம் போல் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு திரும்பி விடுவார் என நினைத்தேன். எனக்கு அவர்தான் திருமணம் செய்து வைத்தார். அதன் பின் சிலமுறை மட்டுமே அவரை பார்த்திருக்கிறேன்” என சிறிது நேரம் அவரை பற்றியே பேசிக்கொண்டிருந்தாராம். 
 
அதோடு, அக்கா இருந்திருந்தால் கருணாநிதிக்கு கண்டிப்பாக மெரினாவில் இடம் கொடுத்திருப்பார். இந்த விஷயத்திலுமா எடப்பாடி பழனிச்சாமி அரசியல் செய்துள்ளார்? என கோபமாக பேசினாராம். அதன்பின், தனது கட்சி தொடர்பாக சில முக்கிய விஷயங்களை சசிகலாவிடம் தினகரன் விவாதித்துள்ளார். அது கேட்டு சில ஆலோசனைகளை சசிகலா வழங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்